லண்டன்/வாஷிங்டன்/டாவோஸ்: செங்கடல் வட்டாரத்தில் அமெரிக்காவால் நடத்தப்படும் கப்பல்களை தொடர்ந்து தாக்கிவரும் ஹூதி கிளர்ச்சிப் படையை அமெரிக்கா பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இவ்வட்டாரம் வழியாகச் செல்லும் கப்பல்களை ஈரான் ஆதரவு ஹூதிப் படை தாக்கி வருவதால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெரிய நாடுகள் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இஸ்ரேலுக்கும் காஸாவில் உள்ள பாலஸ்தீன ஹமாசுக்கும் இடையே மூன்று மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போர் மற்ற வட்டாரங்களுக்கும் பரவுவதை ஹூதி கிளர்ச்சிப் படையின் தாக்குதல்கள் காட்டுகின்றன.
பாலஸ்தீனர்களுடனான ஒற்றுமைக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ஹூதிப் படை கூறியுள்ளது. அமெரிக்க, பிரிட்டிஷ் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கக் கப்பல்களை உள்ளடக்கும் வகையில் மற்ற வட்டாரங்களுக்கும் தாக்குதல்களை விரிவுபடுத்தப் போவதாக அது கூறியுள்ளது.
ஆனால் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் ஹூதிப் படையை தடுத்து நிறுத்தியதாக தெரியவில்லை.
சென்ற புதன்கிழமை யு.எஸ். ஜென்கோ பிகார்டி எனும் சரக்குக் கப்பலை ஏவுகணைகளைக் கொண்டு நேரடியாகத் தாக்கியதாக ஹூதிப் படை அறிவித்தது.
இவ்வாரம் இரண்டாவது முறையாக அமெரிக்கா தொடர்பிலான கப்பல் தாக்கப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்கக் கப்பல் நிறுவனமான ஜென்கோவும் உறுதி செய்துள்ளது.
ஏடன் வளைகுடா வழியாகச் சென்றபோது தனது சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதாக அது கூறியது.
சிப்பந்திகள் யாரும் காயம் அடையவில்லை. கப்பலுக்கு மட்டும் சிறிது சேதம் ஏற்பட்டது. அப்பகுதிக்கு வெளியே கப்பல் பயணிப்பதாகவும் ஜென்கோ தெரிவித்தது.