சோல்: வடகொரியா, நீருக்கடியில் செயல்படக்கூடிய அணுவாயுதங்களைச் சோதித்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகியவை நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்தது.
நீருக்கடியில் செயல்படும் அணுவாற்றல் கொண்ட ஆளில்லா வானூர்திக்கு ‘ஹெயில்-5-23’ என்று வடகொரியா பெயரிட்டுள்ளது.
நாட்டின் கிழக்குக் கரையோரக் கடல் பகுதியில் வடகொரியத் தற்காப்பு அமைச்சு அதைச் சோதித்தாகக் கூறப்படுகிறது.
அந்தச் சோதனை எப்போது நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மூன்றும் நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சியைக் குறைகூறிய வடகொரியத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர், அந்நாடுகள் பேரழிவை ஏற்படுத்தும் பின்விளைவைச் சந்திக்க நேரும் என்று எச்சரித்துள்ளார்.