மாஸ்கோ: உக்ரேன் மீது ரஷ்யா ஒரே இரவில் 17 ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் 14ஐ உக்ரேனின் ஆகாயப் படையின் சாதனங்கள் அழித்ததாக உக்ரேனின் ஆகாயப்படை திங்களன்று தெரிவித்தது.
கப்பலிலிருந்து ஏவப்பட்ட’கேஎச் - 59’ ரக ஏவுகணையையும் அழித்ததாக அது மேலும் குறிப்பிட்டது.
‘எஸ் - 300’ எனப்படும் தரையிலிருந்து விண்ணில் சீறிப்பாய்ந்து, நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரேன்மீது ரஷ்யா பாய்ச்சியதாக உக்ரேன் ஆகாயப்படை ‘டெலிகிராம்’ செயலி மூலம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.
எத்தனை ஏவுகணைகளை ரஷ்யா பாய்ச்சியது, எந்த இலக்குகளை நோக்கி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது போன்ற விவரங்களை அதில் உக்ரேன் ஆகாயப்படை குறிப்பிடவில்லை என ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
உக்ரேனின் வடகிழக்கில் உள்ள கார்கிவ் பகுதியை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக அவ்வட்டார ஆளுநர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
இந்தத் தாக்குதலால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சில குடியிருப்பு அல்லாத கட்டடங்களின் முகப்புகள் சேதமடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மை காலமாக, உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தங்கள் வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகவும் அவ்விரு நாடுகளும் முக்கியமான ஆற்றல், ராணுவம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.