கியவ்: கிழக்கு உக்ரேனில் உள்ள சூமி, டொனியெட்ஸ்க் வட்டாரங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணை, வெடிகுண்டுத் தாக்குதல்களில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் புதன்கிழமையன்று (மார்ச் 13) தெரிவித்தனர்.
டொனியெட்ஸ்க் வட்டாரத்தில் உள்ள மியர்னோராட் நகரில் ரஷ்யப் படைகள் வெடிகுண்டு வீசியதாகவும் இருவர் கொல்லப்பட்டதுடன் ஐவர் காயமடைந்ததாகவும் அப்பகுதி ஆளுநர் வாடிம் ஃபிலாஷ்கின் டெலிகிராம் செயலிவழி கூறினார்.
நள்ளிரவில் ரஷ்யா பாய்ச்சிய ஓர் ஏவுகணை அடுக்குமாடி வீட்டுக் கட்டடம் ஒன்றைத் தாக்கியதைத் தொடர்ந்து சிலர் கொல்லப்பட்டதாக சூமி வட்டார ராணுவம் தெரிவித்தது. ரஷ்யத் தாக்குதலால் அந்த ஐந்து தளக் கட்டடத்தில் 30 வீடுகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 15 வீடுகள் கிட்டத்தட்ட அழிந்துபோனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இடிபாடுகளிலிருந்து 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அவர்களில் எட்டு பேர் காயமுற்றதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 12) ரஷ்யா பாய்ச்சிய ஏவுகணை ஒன்று மத்திய உக்ரேனின் கிரிவ்யி ரீ நகரில் இருக்கும் இரண்டு அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்களைத் தாக்கின. குறைந்தது நால்வர் மாண்டனர், 50 பேர் காயமடைந்தனர்.
உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி அந்நகரில்தான் பிறந்து வளர்ந்தவர்.