மனாடோ: இந்தோனீசியாவில் எரிமலை ஒன்று ஐந்து முறைக்கு மேல் குமுறியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஏப்ரல் 18) ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றினர்.
எரிமலையின் கடும் சீற்றம் காரணமாக அருகில் இருந்த விமான நிலையம் மூடப்பட்டு கட்டடச் சிதைவுகள் விழக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மவுண்ட் ருவாங் எரிமலை புதன்கிழமை (ஏப்ரல் 17) ஏற்கெனவே நான்கு முறை குமுறியது. தொடர்ந்து இரவிலும் மின்னல்வெட்டுக்கு இடையே எரிமலைக் குழம்பு சிதறியது.
அதனைத் தொடர்ந்து எச்சரிக்கை நிலையை நான்கடுக்கு முறைக்கு அதிகாரிகள் உயர்த்தினர். அதுதான் ஆக அதிகமான எச்சரிக்கை நிலை.
இந்தோனீசியாவின் எல்லை அருகே உள்ள வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த எரிமலையில் இருந்து வியாழக்கிழமை காலையில் புகை வெளியேறியது. அந்தப் பகுதி முழுவதும் ஒரே புகைமூட்டமாகக் காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சுலவேசி தீவில் உள்ள மனாடோ நகர அனைத்துலக விமான நிலையம் 24 மணி நேரங்களுக்கு மூடப்பட்டது.
அருகில் வசிக்கும் 11,000 குடியிருப்பாளர்களைப் பத்திரமாக வெளியேற்றுவதில் மீட்புப் படை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.
டாகுலான்டாங் என்னும் தொலைதூரத் தீவில் இருந்தும் சில குடியிருப்பாளர்களை அவர்கள் வெளியேற்றினர்.
ஏற்கெனவே சில குடியிருப்பாளர்கள் பீதியில் அவர்களாகவே வெளியேறி ஓடிவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
“எரிமலைச் சீற்றத்தின் காரணமாகவும் சிறு சிறு கற்கள் விழுந்ததன் காரணமாகவும் நேற்று (புதன்கிழமை) இரவு பலர் வெளியேறிவிட்டனர்,” என்று உள்ளூர் தேடி, மீட்பு முகவை ஒன்றின் அதிகாரியான ஜேன்ட்ரி பாயென்டோங் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றில் கூறினார்.
கடலோரப் பகுதியில் இருந்த தமது முகவையின் 20 பணியாளர்கள் ரப்பர் படகுகளில் குடியிருப்பாளர்களை ஏற்றி அனுப்ப உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.