ஜார்ஜ்டவுன்: தண்ணீர் விநியோகத் தடையால் பினாங்கில் 590,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 14ஆம் தேதியன்று மீண்டும் தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக பினாங்கு தண்ணீர் விநியோக நிறுவனம் (பிபிஏபிபி) தெரிவித்துள்ளது.
சுங்கை டுவா தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையிலும் மேலும் 22 இடங்களிலும் ஜனவரி 10ஆம் தேதியன்று மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக, ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்களுக்குத் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.
தண்ணீரை பழையபடி விநியோகம் செய்வது நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 13ஆம் தேதி 83 விழுக்காட்டினருக்கு மீண்டும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டதாக பிபிஏபிபி தெரிவித்தது.
எஞ்சிய வீடுகளுக்கு ஜனவரி 14ஆம் தேதி காலை 6 மணியளவில் தண்ணீர் விநியோகம் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. பெர்னாமா செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.