நாட்டு மக்களின் பரிதாப நிலையை அறியாத ஒரு மன்னனுக்கு சிறு வயதிலேயே இறக்கும் விதி. மரணத்திற்குப் பிறகு தன்னுடன் சேர்ந்து சொர்க்கத்திற்கு செல்வதற்குத் துணை தேவை என்ற காரணத்தினால் மாறுவேடத்தில் தனது ஊருக்குச் சென்று மக்களின் ஏழ்மை நிலையைக் கண்டறியும் மன்னரின் கதை தான் இவ்வாண்டின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை நடத்திய ‘சங்கே முழங்கு’ மேடை நாடகம்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இவ்வாண்டு மேடை ஏற்றப்பட்ட சங்கே முழங்கு நாடகம் ஆகஸ்ட் 4, 5ஆம் தேதிகளில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் நடைபெற்றது.
மக்களின் ஏழ்மை நிலையை அறிந்த மன்னன், பல சதிகாரர்களின் திட்டங்களையும் கொலை முயற்சிகளையும் தாண்டி வந்து மக்களுக்கு உதவ முயற்சி செய்கிறார். எதிர்பாராத முடிவுகொண்ட இந்த மேடை நாடகம் காதல், சோகம், நகைச்சுவை, ஆடல், பாடல் அம்சங்களால் மக்களைக் கவர்ந்தது.
இதில் புத்தாக்க முறையில் தமிழ்த் திரைப் பாடல்களைக் கதைக் களத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து கதாபாத்திரங்கள் மேடையில் பாடினர். ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என்ற சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஆராய்ந்து சிந்திக்கவும் வைத்தது இந்த நாடகம்.
சுமார் 150 மாணவர்களால் படைக்கப்பட்ட இந்த நாடகம் பிரம்மாண்ட மேடை அலங்காரங்கள், கவர்ச்சியான நடனங்கள், அக்காலத்திற்கு ஏற்ப எளிமையான உடைகள் போன்றவற்றால் மக்களின் மனதில் இடம் பிடித்தது.
“நாடகம் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு அதன் ஒளி, ஒலி உத்திகளால் பலரையும் ஈர்த்தது. மாணவர்களின் முயற்சிகளும் நாடகத்தின் மீதான வேட்கையும் நாடகத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை தெரிந்தது,” என்று முதன்முறையாக சங்கே முழங்கு மேடை நாடகத்தைக் கண்ட திரு மு. ஜைஷ் கூறினார்.
மேடை அலங்காரங்கள் பெரிதாக வியக்கும் வகையில் மாணவர்களே உருவாக்கியதை அறிந்த திரு ஜைஷ், மாணவர்களின் உழைப்பைப் பாராட்டினார்.
மூன்று மணி நேரம் நீடித்த இந்த மேடை நாடகத்தை இரு நாள்களிலும் சுமார் 2,500 பேர் கண்டு மகிழ்ந்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் நல்ல நட்புகள் கிடைத்தததாகப் பகிர்ந்து கொண்டார் தமிழ்ப் பேரவையின் உறுப்பினரும் விளம்பரக் குழுவின் தலைவருமான திரு சஞ்ஜய்.
“நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரம்மாண்டத்தை மேடை ஏற்றியது எங்களுக்குப் பெருமை. எங்களில் பலருக்கு மேடை நாடக அனுபவங்கள் இல்லாததால் பல சிக்கல்களை எதிர்கொண்டோம். ஆனாலும் கடின உழைப்புடன் இந்த மேடை நாடகத்தை வெற்றிகரமாக முடித்து விட்டோம்,” என்று நாடகத்தின் நடனங்களில் ஈடுபட்ட சஞ்சய் கூறினார்.
இதில் உயர்நிலை, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தில் நடத்தப்படும் சங்கே முழங்கு நிகழ்ச்சிகளுக்கு வருகை புரிந்து மேடை நாடகத்தின் சிறப்புகளைக் கண்டறிய விரும்புகிறார் சஞ்சய்.
இதில் முதன் முதலாக மேடை நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து அசத்திய அஜ்மினா பானு, 24, இந்த அனுபவத்தினால் கிடைத்த ஆற்றல்கள் தனக்குப் பெரிதும் உதவியதாகப் பகிர்ந்து கொண்டார்.
“ஒரு கதாபாத்திரமாக உருவெடுத்து நடிக்கும் நுணுக்கங்களை மூன்று மாதங்களில் கற்றுக்கொண்டேன். மேடையில் வசனம் கூறுவது நடிப்பு அல்ல. உணர்வுகளுடன், புரிந்துணர்வுடன் நடிப்பதோடு மற்ற கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடிக்க வேண்டும்,” என்று நடிப்பின் கூறுகளை கற்றுக் கொண்ட அஜ்மினா பானு கூறினார்.