ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்பெற்ற ‘லாலீகா’ காற்பந்துப் பள்ளிக்குச் சென்று முழுநேரக் காற்பந்து வீரராகும் தன் கனவை நிறைவேற்ற இருக்கிறார் 14 வயது ஆர்யா மகேஸ்வரன்.
பள்ளியில் சேர்வதற்காக 46 நாடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் போட்டியிடுவர். ஒவ்வொரு மாணவர் சேர்க்கை நடவடிக்கையிலும் ஏறத்தாழ 36 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாணவர் டென்சல் அரி திருமுருகன் கடந்த ஆண்டு ‘லாலீகா’ பள்ளியில் சேர்ந்ததைக் கேள்வியுற்ற ஆர்யாவின் தந்தை மகேஸ்வரன் தேவதாஸ், தம் மகனையும் சேர்க்க முடிவு செய்தார்.
செங்காங் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் ஆர்யா, தம் தந்தையின் ‘எஃப் 17’ காற்பந்துப் பள்ளியில் பயிற்சி பெற்றார்.
இளையர்களிடையே காற்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் ‘அன்லீஷ் த ரோர்’ திட்டத்தில் சேர்ந்த உயர்நிலைப் பள்ளிக் காற்பந்துக் குழுவில் ஆர்யா மும்முரமாக ஈடுபட்டு பல்வேறு உள்ளூர், வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தேசிய காற்பந்துப் போட்டியில் ஆர்யாவின் குழு மூன்றாவது நிலையில் வந்தது. ஒரு வாரத்திற்கு முன் ஆர்யாவின் உயர்நிலைப் படிப்பும் முடிந்தது.
பள்ளியில் சேர்வதற்கான மூன்று மாத விண்ணப்பக்காலத்தின்போது ஆர்யா தன் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததுடன் தொலைபேசி வழியான நேரடிப் பேட்டியில் பங்கேற்றும் தான் காற்பந்து விளையாடுவதைக் காட்டும் காணொளிகளை அனுப்பி வைத்தும் இருந்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் வாரத்தில் ஆர்யாவை ஏற்றுக்கொள்வதாக லாலீகா பள்ளி கடிதம் அனுப்பியது. பள்ளிக்கட்டணம், ஆண்டுக்கு 75,000 வெள்ளி முதல் 80,000 வெள்ளி வரை என்று தெரிவிக்கப்பட்டது.
வாரத்திற்கு மூன்று முறை ஸ்பானிய மொழியைக் கற்று வரும் ஆர்யா, அடுத்த வாரம் லாலீகா செல்கிறார். அங்கு இவர், அந்நாட்டின் ஸ்பானிய மொழியிலேயே சில பாடங்களைப் படிக்க இருக்கிறார்.
படிப்பின் முடிவில் இவருக்குப் பட்டயக்கல்வி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 4ஆம் தேதியன்று ஆர்யாவின் பள்ளித் தவணை ஆரம்பிக்கும்.
உடம்பைக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள காற்பந்து தவிர சைக்கிளோட்டத்தில் ஈடுபடுவதாக வழக்கமாகத் தாக்குதல் ஆட்டக்காரராகவும் வலது திடல் ஆட்டக்காரராகவும் விளையாடும் ஆர்யா கூறினார்.
ஓய்வு நேரத்தில் ஆர்யா காற்பந்தாட்டக் காணொளிகளைப் பார்த்து ஆட்டக்காரர்களின் திறமைகளை ஆராய்வார். அத்துடன், படிப்புக்கு இடையிடையே காற்பந்தைக் கால்களால் உதைத்துப் பயிற்சி செய்வார்.
‘இங்கிலிஷ் ப்ரிமியர் லீக்’ காற்பந்துப் போட்டிகளை விடாமல் பார்க்கும் ஆர்யா, லிவர்பூல் அணியின் சாலாவும் மான்செஸ்டர் யுனைடெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தனக்குப் பிடித்த விளையாட்டாளர்கள் என்றார்.
காப்புறுதித் துறையைச் சேர்ந்த ஆர்யாவின் தந்தை திரு மகேஸ்வரன், மகன் ஐந்து ஆண்டுகள் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து படிப்பது குறித்து ஆர்யாவின் தாயாருக்குச் சற்று வருத்தமாக இருந்ததைக் குறிப்பிட்டார். எனினும், தம் மகனின் எதிர்காலத்திற்கு இது நல்லது என்றார் திரு மகேஸ்வரன்.
“ஆர்யா தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஒருபக்கம் மகிழ்ச்சி, மறுபுறம் அவனைவிட்டுப் பிரிகிறோமே என்ற ஏக்கம்,” என்று அவர் கூறினார். ஆர்யாவின் கனவை நனவாக்கத் தம்மால் இயன்றதைச் செய்ததாகக் கூறிய திரு மகேஸ்வரன், 45, தம் மகன் படிப்பிலும் விளையாட்டிலும் மட்டுமன்றி அனைத்துலக அளவில் தொடர்புகளை உருவாக்கக்கூடியவராக வளரவேண்டும் என விரும்புகிறார்.
பெரும் முயற்சியிலும் செலவிலும் இதற்கு ஏற்பாடு செய்த தம் தந்தைக்கு நன்றி கூறும் ஆர்யா, திறந்த மனதுடன் சென்று முடிந்ததைக் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.
“என் பயிற்றுவிப்பாளர்களை முழுமையாக நம்பி பயிற்சியில் ஈடுபடப் போகிறேன். பயிற்றுவிப்பாளர்களின் சொற்படி நடப்பேன்,” என்று ஆர்யா கூறினார். முழுநேரக் காற்பந்து வீரராக சிங்கப்பூர் தேசிய அணியில் விளையாடுவதே தன் வருங்கால கனவு என்றார் ஆர்யா.