சிறு சிறு செயல்கள்கூட பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனும் கருத்தை சிறுவர்களிடத்தில் புகுத்துகிறது பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் ‘ஸ்டார்ட் ஸ்மால், ட்ரீம் பிக்’ (எஸ்எஸ்டிபி) இயக்கம்.
எஸ்ஜி50 மற்றும் அதிபர் சவாலின் 15வது ஆண்டு நிறைவைக் கொண்டாட தொடங்கிய இ்வ்வியக்கத்தில் பங்கேற்கும் பாலர் பள்ளிகள் ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் சமூக சேவைத் திட்டங்களைச் செயல்படுத்தும்.
இதன் அடிப்படையில் சிறுவர்களிடத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரித்துள்ளது தோ பாயோ கிழக்கு புளோக் 6 பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியின் 6 மாத முயற்சி. இதற்குத் தலைமை தாங்குவது ஆசிரியை உ ரூபாஸ்ரீ, 26.
இதன்வழி மாணவர்கள் சுற்றுப்புறத்தைக் கட்டிக்காப்பதன் அவசியத்தையும் குறைவான பயன்பாடு, மறுபயனீடு, மறுசுழற்சி சார்ந்த நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொள்கின்றனர்.
மார்ச் மாதத்தில் இத்திட்டம் தொடங்கியபோது, ஆசிரியை ரூபாஸ்ரீயும் சக ஆசிரியர்களும் பெற்றோரிடம் இத்திட்டத்தின் நன்மைகளை உணர்த்தினர். பெற்றோரும் இதற்கு பலத்த ஆதரவு வழங்கினர்.
கரண்டிகள், பிளாஸ்டிக் பைகள், போத்தல்கள் போன்று தினசரி தூக்கிப் போடும் பொருட்களை மறுசுழற்சிக்காக பிள்ளைகளிடம் தவறாமல் கொடுத்தனுப்பினர்.
“நாளடைவில் பிள்ளைகளே பெற்றோரிடம் பொருட்களை வீசுவதற்குப் பதிலாக மறுசுழற்சிக்காக பள்ளிக்கு எடுத்துவரலாம் என்று வற்புறுத்தினர். இது எங்கள் திட்டத்தின் வெற்றி,” என்று ஆசிரியை ரூபாஸ்ரீ பெருமிதத்துடன் கூறினார்.
காலி பால் தகரங்களை இசைக் கருவிகளாக மாற்றுதல், பயன்படுத்தப்பட்ட அட்டைகள், போத்தல் மூடிகளைக் கொண்டு எண்ணும் எழுத்தும் பயின்றல், கோப்பைகள், ஐஸ்க்ரீம் குச்சிகள், முட்டை அட்டைகளுக்கு சாயம் பூசி போக்குவரத்து விதிமுறைகளை கற்றல் போன்ற புத்தாக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் சிறுவர்கள்.
“வீண் பொருட்களை எவ்வாறு வகைப்படுத்தி மறுபயன்பாடு செய்வது என்பதைப் பள்ளியிலேயே என் பிள்ளைக் கற்றுக்கொள்வதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் தாயார் திருமதி அமினா, 37.
இத்திட்டத்தின் விளைவாக குப்பை சேகரிப்பு ஊழியர்களின் வேலையின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த இளம் நெஞ்சங்கள், அவர்களுக்குக் கையால் எழுதப்பட்ட நன்றி அட்டைகளையும் வழங்கி மகிழ்வித்தனர்.
தேசியச் சுற்றுப்புற அமைப்பும் இம்முயற்சிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் செம்ப்கார்ப் நிறுவனமும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மறுபயனீடு பற்றிய பயிலரங்கை நடத்தியது.
“பெற்றோர், ஆசிரியரை அடுத்து பாலர் பள்ளி மாணவர்கள் நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்வது சுற்றுச்சூழலிலிருந்துதான். அத்தகைய சூழலை எங்கள் பள்ளி ஏற்படுத்திக்கொடுக்கிறது,” என்றார் பள்ளி முதல்வர் திருவாட்டி சியன் சியாவ்லி, 37.
“ஒருவரால் அனைத்தையும் செய்ய முடியாது; ஆனால் அனைவராலும் ஒன்றையாவது செய்யமுடியும்,” என்ற எஸ்எஸ்டிபி இயக்க முழக்கவரியை உந்துதலாகக் கொண்டு ஆசிரியை ரூபாஸ்ரீ போன்று ஆசிரியர்கள் பலரும் சமூக முயற்சிகளில் தம் மாணவர்களை ஈடுபடுத்தி நன்னெறிகளைப் போதிக்கின்றனர்.