காலை வெயில் சுட்டெரித்த போதிலும் தமிழ் முரசு செயலியின் வெளியீட்டு விழாவைக் காண வந்தோரின் உற்சாகம் குறையவில்லை. தீபாவளிச் சந்தையின் கூடாரத்திற்கு மத்தியில் மலர்ச்சரங்கள், தொம்பைகள், வண்ணப் பைகள் என அலங்காரமயமான சூழலுக்கு நடுவே பார்வையாளர்கள் அமர்ந்து செயலியின் அறிமுக நிகழ்ச்சியைக் கண்டனர்.
இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே தமிழ் முரசின் சின்னத்திற்கே உரிய சிவப்பு, வெள்ளை நிறங்கள் மேடையை நிரப்பின. நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட முக்கிய விருந்தினர்களுடன் ஏறக்குறைய 400 பேர் கூடியிருந்தனர்.
காலை 10 மணி அளவில், நிகழ்ச்சி மேடையில் ‘டமாரு’ பறை இசைக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் தோள் தட்டி, துள்ளி ஆடிக் கொண்டு நிகழ்ச்சிக்குச் சிறப்பு வருகை அளித்திருந்த அமைச்சர் கா. சண்முகத்தை வரவேற்றனர்.
திரு சண்முகத்துடன் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி டியோ லே லிம், எஸ்பிஎச் மீடியாவின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் தலைமை ஆசிரியர் திரு வோங் வெய் கோங், தமிழ் முரசின் ஆசிரியர் திரு ராஜேந்திரன் ஜவஹரிலால், தலைமை உதவி ஆசிரியர் திரு அண்.சிவ.குணாளன் ஆகியோரும் இணைந்து செயலியை வெளியிட்டனர்.
செயலியின் வெளியீட்டு நிகழ்ச்சி தமிழ் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் மைல்கல் என்றும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் தமிழ் முரசின் இணை ஆசிரியருமான வீ. பழனிச்சாமி கூறினார்.
பின்னர், நிகழ்ச்சியின் தொடக்க உரை ஆற்றிய செய்தி ஆசிரியர் இர்ஷாத் முஹம்மது, உலகின் மிகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தமிழ் முரசு, மேலும் ஒரு சிகரத்தை எட்டியிருப்பதாகக் கூறினார்.
“கிட்டத்தட்ட 39 ஆண்டுகாலம் இதழாசிரியராக இருந்த சாரங்கபாணி அவர்கள், முரசின் அடிப்படைக் கொள்கைகளையும் குறிக்கோளையும் செயல்முறையையும் தெளிவாக வகுத்திருந்தார்,” என்று அவர் கூறினார்.
தமிழ் பேசும் மக்களின் மேன்மைக்கும் நன்மைக்கும் உழைப்பது, மொழியையும் பண்பாட்டையும் பேணுவது நாட்டு நலனை ஊக்குவிக்கும் செய்திகளைப் பரப்புவது போன்ற கடமைகளைச் செய்துவரும் தமிழ் முரசு, சமூக இதழாக மட்டுமின்றி தேசிய நாளிதழாகத் திகழ்வதையும் திரு இர்ஷாத் சுட்டினார்.
முரசின் அடிப்படை நெறிகள் நிலையானவை என்றாலும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்பவும் தமிழ் முரசு தன்னைத் தக்கவாறு அமைத்துக்கொள்கிறது என்றார் திரு இர்ஷாத்.
அமைச்சர் கா. சண்முகத்தின் வாழ்த்துரைக்கும் செயலியின் வெளியீட்டுக்கும் பின், ராப் கலைஞர் யங் ராஜா, ஆங்கிலத்திலும் தமிழிலும் பாடி, பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
நாள்தோறும் தமிழ் முரசு தங்கள் வீட்டைத் தேடி வருவதால் முடிந்தபோதெல்லாம் அதனை வாசிப்பதாக திரு யங் ராஜா கூறினார்.
“இந்தச் செயலி, தமிழ்ச் சமுதாயத்திற்கு அற்புதமான ஒன்று. இந்தச் செயலியின் மூலம் இளையர்கள் எளிதாக தமிழ்ச் செய்திகளைப் படிக்கலாம்,” என்று அவர் சொன்னார்.
தமிழ் முரசு செயலிக்கான விளம்பரத்தைத் தயாரித்து இயக்கிய ஸ்டீவன் செளந்தரராஜன், தொழில்நுட்பம் அதிவிரைவாக முன்னேறும் உலகில் தமிழில் வெளிவரும் செய்திகளைப் படிக்க வாசகர்களை ஊக்குவிப்பதற்குச் செயலி தேவை எனக் கருதுகிறார்.
“தமிழ் முரசு வெறும் நாளிதழ் அல்ல. நம் இந்தியச் சமூகத்தின் முக்கிய அங்கம். தமிழ் முரசு செயலியின் விளம்பரத்தைத் தயாரித்து இயக்குவது எனக்கு மிகப் பெரும்பேறாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
“இளையர்களையே மையமாகக் கொண்டு இந்தச் செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் தமிழோடு இணைந்திருக்க மேலும் ஒரு தளத்தை இந்தச் செயலி வழங்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் தமிழ் முரசின் மின்னிலக்க ஆசிரியர் எஸ். வெங்கடேஷ்வரன்.