தேசிய சேவையின்போது இடைவேளைகளில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் தமக்கென செலவிடாமல் சமூக சேவையாற்றி வருகின்றனர் தன்னலமற்ற இளையர்கள் மூவர்.
இவர்கள் சிண்டா, தமிழர் பேரவை, சிங்கைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளின் இளையர் பிரிவுகளில் சேவையாற்றிவருகின்றனர்.
தழைத்தோங்கும் தலைமைத்துவம்
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் ‘சார்ஜண்ட்’டாக சேவையாற்றிவரும் முகமது ஃபிர்தோஸ், 23, சிண்டாவில் தொண்டூழியராகவும் பணிபுரிந்துவருகிறார். இவ்வாண்டு சிண்டா இளையர் விருதை இவர் பெற்றுள்ளார்.
தேசிய சேவையின்போதே சிண்டா தலைமைத்துவ முகாம்கள், 24 மணி நேரத் தொண்டூழியம், ‘கேம்’ எனும் தோழர் வழிகாட்டுதல் திட்டம், வீட்டுக்கு வீடு சென்று நலம் விசாரித்தல், மூத்தோரின் வீடுகளில் துப்புரவு செய்தல் போன்றவற்றில் இவர் ஈடுபட்டுள்ளார்.
இவரது சிண்டா பயணம், சிறுவயதில் ‘ஸ்டெப்’ திட்டத்தில் தொடங்கியது. பின்பு தொழில்நுட்பக் கல்விக் கழக ‘அஸ்பையர்’ திட்டத்தில் தொடர்ந்தது. அதன்வழி கிடைத்த தன்னம்பிக்கையால் ஆசியான் உலகத் திறன்கள் போட்டியில் ஃபிர்தோஸ் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தார்.
அந்த அனுபவங்கள் தேசிய சேவையிலும் இவர் சிறந்த தலைவராக முன்னேறக் கைகொடுத்தன.
இரட்டைப் பிறவியோடு இரட்டைச் சேவை
தனது இரட்டைச் சகோதரர் திவ்யனுடன் சிண்டா இளையர் மன்றத்தில் சமூகச் சேவையாற்றுகிறார் தீபன் நாயர், 26. அண்மையில் இருவரும் சிண்டா இளையர் விருதைப் பெற்றனர்.
ஜுலை 2021 முதல் ஏப்ரல் 2023 வரை தரைப்படையில் ‘லெஃப்டினண்ட்’டாகப் பணியாற்றிய இவர், வார இறுதி நாள்களை சிண்டாவிற்கு அர்ப்பணித்தார்.
2022, 2023ல் சிண்டா ‘ஐடிஇ’ தலைமைத்துவத் திட்டம் (ஐடெல்ப்), 2022 சிண்டா விளையாட்டுத் திட்டம் (ஸ்பின்) ஆகியவற்றின் ஏற்பாட்டுக் குழுக்களில் பங்களித்தார்.
“களைப்பாக இருந்தாலும் மறவாமல் சிண்டா இளையர் மன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். அங்கிருக்கும் நண்பர்களோடு சமூக நடவடிக்கைகளைத் திட்டமிடுவது எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது,” என்கிறார் தீபன்.
தேசிய சேவை முடிவடைந்தாலும் இவரது சமூகச் சேவை தொடர்கிறது. அண்மையில் சிண்டா தலைமைத்துவக் கருத்தரங்கை (எஸ்ஒய்எல்எஸ்) ஒருங்கிணைத்ததோடு 24 மணி நேரத் தொண்டூழியத்திற்கும் தலைமைதாங்கினார்.
“தூக்கம் வந்தாலும் என்னை நம்பியிருந்தோரை நினைத்து, முழுமூச்சாகச் செயல்பட்டேன்,” என்கிறார் இவர்.
புதுவாழ்வு அளித்த புத்தாண்டுத் தீர்மானம்
‘இத்தனை ஆண்டுகள் எனக்காக வாழ்ந்திருக்கிறேன். இவ்வாண்டு பிறருக்காகவும் வாழ்ந்து பார்ப்போமே’ என்ற புத்தாண்டுத் தீர்மானத்துடன் இவ்வாண்டுத் தொடக்கத்தில் முழுமையாகத் தன் வாழ்வை மாற்றியமைத்தார் ஷேக் தாவுட், 21. இவர் தற்போது கடலோரக் காவற்படையில் தேசிய சேவையாற்றுகிறார்.
முதலில் தமிழர் பேரவை இளையர் பிரிவின் ஊடகக் குழுவில் காணொளித் தொகுப்பாளராகச் சேர்ந்த இவர், அதில் தனக்கிருந்த ஆர்வத்தையும் திறனையும் உணர்ந்தார்.
“நேரம் போவதே தெரியாது. சாப்பாடு, தூக்கம் குறித்தெல்லாம் கவனம் செலுத்தாமல், காணொளித் தொகுப்பு மட்டும் சரியாகச் செய்வேன்.
“ஐந்து நிமிடக் காணொளிக்குப் பின்னால் ஐந்து மணி நேரம் உழைப்பு உள்ளது. என் காணொளிகளில் புத்தாக்கங்களையும் உட்புகுத்துகிறேன்.”
“புதிதானவற்றைக் கற்கவும் எனக்குப் பிடிக்கும். என் குழுவினரும் என்னைப் பாராட்டி ஊக்குவித்தனர்,” என்றும் கூறுகிறார்.
சிங்கைத் தமிழ்ச் சங்க இளையர் பிரிவின் ஊடகக்குழுவில் சேர்ந்த மூன்று மாதங்களிலேயே அப்பிரிவின் துணைத் தலைவரானார் ஷேக் தாவுட்.
இவ்வாண்டு சிண்டா இளையர் மன்றத்தில் அதன் தலைமைத்துவ முகாம்களுக்கும் அண்மையில் 24 மணி நேரத் தொண்டூழியத்திற்கும் காணொளிகளை இவர் தொகுத்தார்.
“இளையர்கள் சமூக அமைப்புகளில் பங்காற்றுவதன்வழி தங்கள் திறன்களைத் தாங்களே கண்டறியலாம்,” என்கிறார் ஷேக்.