நவீனமயமாகிக் கொண்டுவரும் இக்காலகட்டத்தில், கலை வடிவமாகக் கருதி தங்கள் உடற்கூறுகளை மாற்றியமைத்து அவற்றின் அழகிற்கு மெருகூட்டும் போக்கு இப்போது இளையர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. சமுதாயத்தில் அது இன்னும் நெறிகளுக்குப் புறம்பானதாகப் பார்க்கப்பட்டாலும், அக்கலையை அரவணைத்து அதில் ஈடுபடும் இளையர்களின் அனுபவங்களைக் கேட்டு வந்தது இந்த வார இளையர் முரசு.
புதிதாக எல்லாம் செய்து பார்க்க ஆவல்
பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த யாதவன் சந்திரனின் வீட்டில் பச்சை குத்துவது என்பது வீட்டில் பேசப்படாத தலைப்பாக இருந்தது.
பள்ளிப் பருவத்தில் பச்சை குத்துவதிலும் ‘பியர்சிங்’ எனும் தோலைத் துளைத்து அணிகலன்கள் பொருத்துவதிலும் அவருக்கு ஆசை இருந்தது. 13 வயதில் முதல்முறையாக அவர் பச்சை குத்திக்கொண்டார்.
14 வயதில் பலகைகளை குத்துவதற்கான ஊசிகளை தீ மூலம் சுத்தப்படுத்தி காதுகள், உதடு, நாக்கு, பற்களுக்குமேல், புருவம், நாக்குக்குக்கீழ், நாசித் துவாரங்களின் இடைப்பகுதி ஆகிய இடங்களில் என முகம் முழுவதும் அணிகலன்களைக் குத்தியிருந்தார் யாதவன்.
பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு யாதவன் மீண்டும் ஆறு முறை பச்சை குத்தினார். தற்போது 37 வயதாகும் அவர், உடல் முழுக்க கைகள், மார்பு, கழுத்து, முதுகு ஆகிய இடங்களில் பச்சை குத்தியுள்ளார்.
ரிவர் வேலியில் இருக்கும் பச்சை குத்தும் கலைஞரின் வழக்கமான வாடிக்கையாளரான யாதவன், தனக்குப் பிடித்த வடிவத்தைப் பச்சை குத்துவதைவிட பச்சை குத்தும் கலைஞர் அவரது படைப்பாற்றலை ஆராயத் தன் உடலை அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
பொது இடங்களில், சற்று நேரம் நின்று விசித்திரமான கோணத்தில் பலர் அவரைப் பார்த்ததுண்டு. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானச் சிப்பந்தியாக பணிபுரிய வாய்ப்பு கிட்டியபோது அவர் கழுத்துக்குப்பின் பச்சை குத்தியதால் அவ்வேலை வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது.
பிறகு சமையல் வல்லுநர், மதுபானக் கடைக்காரர் எனப் பல துறைகளில் வேலைபார்த்த யாதவன் தனக்கென ஓர் அடையாளத்தை அமைக்கத் தொடங்கினார். இன்று ஆறு தொழில்களுக்குச் சொந்தக்காரர் யாதவன்.
பச்சை குத்தும் கலையும் எனது பணியும் சமம்
ஆண்களுக்கு முடி திருத்துபவராக இருக்கும் சிவகுரு ராஜா கண்ணு, 30, தொடக்கத்தில் பச்சை குத்துவதில் நாட்டம் வைத்ததில்லை. ஆனால் பிறகு அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இன்று அவர் ஒரே ஒரு வடிவத்தை மட்டும் தனது உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார்.
தினமும் பல வாடிக்கையாளர்களின் சிகை அலங்காரத்திற்கு மெருகூட்டி வரும் சிவகுரு, ஒரு முறை எதேச்சையாக பச்சை குத்தும் கலைஞரின் கடைக்குச் சென்றதாகக் கூறினார்.
பச்சை குத்துவதும், முடி திருத்துவதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கலை என்று கருதும் சிவகுரு பச்சை குத்தும் கலைஞருடன் சிறிது நேரம் பேசிய பிறகு அதன்பால் ஈர்க்கப்பட்டார்.
முதல் முறை அவர் சிறிய பாம்பு வடிவத்தை காலில் பச்சை குத்தினார். அப்போது அவருக்கு வயது 21.
நாளடைவில் பலமுறை பச்சை குத்திக்கொண்டார். தாயாரின் மறைவுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் பச்சை குத்திக்கொண்டார் சிவகுரு.
அதைக் கவனித்த வயதான உறவினர்கள் சிலர் சிவகுரு அமானுடச் சடங்குகளில் ஈடுபடுபவர், ரகசியமான நடவடிக்கைகளில் ஈடுபடும் தீய பழக்கம் உள்ளவர் என்று நினைத்துக் கொண்டனர்.
பச்சை குத்துவது தவறு இல்லையென்றும் இதனால் யார் என்ன கூறினாலும் ஒருவர் தனது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமென்றும் கூறிய சிவகுரு, அடுத்து தன் தோலைத் துளைத்து அணிகலன்களை அணியத் திட்டமிட்டுள்ளார்.
பிறர் என் அழகை ரசிக்க வேண்டும்
அழகுபடுத்துதல் என்று வந்துவிட்டாலே 27 வயதாகும் நவீனா வினோத்தினி, மாறிவரும் அழகுப் போக்குகள் அனைத்தையுமே பதம் பார்த்து விடுவார்.
நவீனா சந்தோஷத்தில் சிரிக்கும் போது அவர் பல்லில் அலங்காரக் கல் மிளிர்வதை நாம் காணலாம். அவரது புருவங்களின் வடிவமும் எம்பிராய்டரி என்னும் நிரந்தர பச்சை குத்தும் முறையால் மாற்றியமைக்கப்பட்டவை.
கண் இமைகளின் அழகுக்கு மெருகூட்ட அவர் இமை நீட்டிப்பு செய்துள்ளார். அழகாகத்
தோற்றமளிக்க அவர் தனது இமை முடிகளைச் செயற்கையாக நீளமாக்கிக்கொண்டுள்ளார். முகத்தில் தனிப் பொலிவு தென்படுவதாகவும் கூறும் அவர், முழு நேர பாலர் பள்ளி ஆசிரியருக்கு அப்பாற்பட்டு நேரம் கிடைக்கும்போது ‘மாடலிங்’கிலும் ஈடுபட்டு வருகிறார்.
தன் நண்பர்கள் சிலரின் பற்களில் அலங்காரக் கற்கள் மிளிர்ந்ததைக் கவனித்த நவீனா சென்ற ஆண்டு தன் பிறந்தநாளின்போது முதல் முறையாக அலங்காரக் கல்லைப் பற்களில் பொருத்தினார்.
இன்று வரை அவருக்கு அதன் மேல் இருக்கும் மோகம் குறையவில்லை. சிறிய கல்லில் தொடங்கி அவர் தற்போது கோரைப் பல் போல் வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் கல்லைப் பொருத்தியுள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் அவரின் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தாலும் இது போன்ற அழகு சேவைகளில் ஈடுபடுவதால் செலவு அதிகமாகும் என்று அக்கறை கொண்டுள்ளனர்.
இருப்பினும், “ஒரு வீட்டை அலங்கரித்தால் அது எப்படி அழகாக இருக்கிறதோ அது போலத்தான் நான் என் அழகை மேம்படுத்துகிறேன்,” என்கிறார் நவீனா.
சிறு வயதிலிருந்தே மெல்லிய புருவங்கள் கொண்டுள்ள அவருக்கு மாடலிங் செய்வதால் அடர்த்தியான புருவங்கள் வைத்திருந்தால் மேலும் அழகாக இருக்கும் என்று தோன்றியது.
புருவங்களுக்குப் பச்சை குத்தும் எம்பிராய்டரி செய்துகொண்ட அவர் இப்போது தனது புருவங்கள் நிரந்தரமாக மிக அடர்த்தியாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
மாடலிங் செய்யும்போது அடர்த்தியான புருவம் இருப்பது சிறந்தது என்கிறார் நவீனா.
சந்தையில் எவ்வித நவீன அழகுப் போக்கு அறிமுகம் கண்டாலும் அதை பயன்படுத்திப் பார்த்துவிடுகிறார் நவீனா.
கண் இமைகள் நீண்டு இருப்பதால் கண்களின் அழகு மெருகூட்டப்படுகிறது. தனது கண்களுக்கு அவை பாரமாக இல்லை என்று கூறினார் நவீனா.
பல வடிவங்களில் கண் இமைகளை நீட்டிக்கும் செயல்முறைகள் வந்துள்ளன. அவற்றில் நவீனா, ஆங்கிலப் பிரமுகர் கிம் கர்டாஷியனின் கண் இமை வடிவம், பூனைக் கண் இமை வடிவம் போன்றவற்றை முயன்று பார்த்துள்ளார்.
இது ஓர் எளிதான தெரிவாக இருந்தாலும் அவ்வப்போது கண் தொற்று வராமல் தவிர்க்க நவீனா இமைகளை நன்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு இடையிலும் அழகுக்கு அதிக நேரம் ஒதுக்கும் நவீனா, “முயற்சியின் பலன்தான் அழகு. என்னை முதல் முறையாக பார்ப்பவர் என் அழகைப் பார்த்துதான் மதிப்பிடப் போகிறார். எங்கு சென்றாலும் அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்பது எனது கொள்கை,” என்று சொன்னார்.