சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நவம்பர் 20ஆம் தேதி அறிவித்திருந்த மேம்பட்ட ‘காம்லிங்க்’ தொகுப்புத் திட்டம் (காம்லிங்க்+), ஏற்கெனவே உள்ள காம்லிங்க் திட்டத்தை மேம்படுத்துகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வாடகை வீடுகளில் பிள்ளைகளுடன் வசிக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு விரிவான, ஒருங்கிணைந்த ஆதரவை வழங்க 2019ல் காம்லிங்க் திட்டம் தொடங்கப்பட்டது. வேலை உதவி முதல் சிறார் மேம்பாடு வரை பல விதங்களில் ஆதரவு வழங்கப்படுகிறது.
இரு மாற்றங்கள், கூடுதல் ஆதரவைக் குறிக்கின்றன. முதலாவதாக, குடும்பங்கள் எதிர்நோக்கும் நெருக்குதலைக் குறைக்க உதவ அடிப்படை, குறுகியகால சமுதாய உதவி வழங்குவதற்கும் அப்பாற்பட்டதாக கூடுதல் ஆதரவு அமைகிறது.
இதன்மூலம் குடும்பங்கள் நீண்டகால இலக்குகளை முன்கூட்டியே எட்டுவதில் கவனம் செலுத்த முடியும்.
இரண்டாவதாக, காம்லிங்க் அதிகாரிகளின் பங்கு குடும்பநல அதிகாரியாக மேம்படுத்தப்படும். குடும்பங்களுக்குத் துணைநிற்க, அவற்றின் உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஊக்கம் தர, அவற்றின் சூழ்நிலையை நிலைப்படுத்த, நம்பிக்கையுடன் எதிர்காலத்தைச் சந்திக்க அவற்றுக்கு உந்துதல் தர குடும்பநல அதிகாரிகள் உதவுவர்.
எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய குடும்பங்கள், தாங்கள் விரும்பக்கூடிய நான்கு அம்சங்களை அடையாளம் கண்டுள்ளன. பாலர் பள்ளிக் கல்வி, வேலை நியமனம், நிலையான நிதிச் சூழல், வீட்டுரிமை ஆகியன அவை.
குறைந்த வருமான நிலையிலிருந்து மேம்பட விரிவான பெருந்திட்டத்தை இவை உள்ளடக்குகின்றன.
குடும்பங்களின் செயல்திட்டங்களின் அடிப்படையில் அவற்றுக்குப் பொருத்தமான திட்டங்களைக் குடும்பநல அதிகாரிகள் பரிந்துரைப்பர்.
பிள்ளைகளைப் பாலர் பள்ளிகளில் சேர்த்து அவர்கள் தவறாமல் பள்ளிக்குச் சென்று வருவதையும் நிலையான வருமானம் தரும் வேலையையும் உறுதிசெய்வதில் உறுதியான நடவடிக்கை எடுக்கும் குடும்பங்களுக்கு வழங்குதொகை தரப்படும்.
கடனைத் தீர்ப்பதன் மூலம் நிதிச் சூழலை மேம்படுத்துவதிலும் வீட்டுரிமைக்காக சேமிப்பதிலும் குடும்பங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
வீவக வாடகை வீடுகளில் பிள்ளைகளுடன் வசிக்கும் தகுதிபெறும் குடும்பங்கள் மொத்த வழங்குதொகையாக $30,000 வரை பெற முடியும். அதற்கு குறிப்பிட்ட வேலை நியமன தகுதிக்கூறுகளைப் பூர்த்திசெய்து, சொந்த வீடு வாங்க சேமிப்பதற்காக, விருப்பத்தின் அடிப்படையில் மத்திய சேமநிதிப் பங்களிப்புகளை வழங்க வேண்டும்.
செலுத்தப்படாத பயனீட்டுக் கட்டணம், வீட்டுக் கடன் போன்று கடனைத் தீர்க்க குடும்பங்களுக்கு உதவும் திட்டமும் உள்ளது.
சமுதாயம் வழங்கும் உதவிக்கும் தனிநபர்கள் வேலை செய்ய வேண்டியதற்கான அவசியத்துக்கும் இடையேயான தொடர்பைப் பிரிக்கும் உதவிநலன் திட்டங்களுக்கு இலக்காகிவிடாமல், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சிங்கப்பூரர்களுக்கு சமுதாயப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே காம்லிங்க்+ திட்டத்தின் நோக்கம்.
வேலையின்மையையும் இதர நிதி நெருக்கடியையும், குறிப்பாக பிள்ளைகளைப் பாதிக்கும்போது இவற்றை தனிப்பட்ட பிரச்சினைகளாக மட்டும் கருதிவிட இயலாது. வேலை செய்வதற்குப் பதிலாக சமுதாய உதவி நலனையே சார்ந்திருக்கும் குடும்பங்களின் நிலையைக் கட்டிக்காப்பதை எந்தவொரு சமுதாயத்திலும் எதிர்பார்க்க முடியாது.
சிங்கப்பூரின் வேலைநலன் திட்டங்கள், சமுதாயம் இரக்கம் காட்டுவதற்கும் உதவி பெறுபவர்கள் தங்கள் நிலையை மேம்படுத்திக்கொள்வதில் நிலவும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே சமநிலை காண முற்படுகின்றன.
இதன்மூலம், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் உதவித் திட்டங்கள் அமையும்.