பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு, ஆண்களைவிட 50% கூடுதலாக உழைக்க வேண்டியிருப்பதாக நடிகர் சூர்யா கவலை தெரிவித்துள்ளார்.
இவரது ‘அகரம்’ அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கு என அனைத்துலக கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய சூர்யா, ‘அகரம்’ அறக்கட்டளை நிறுவப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் இதுவரை 6,000 மாணவ, மாணவியர் இந்த அறக்கட்டளை மூலம் படிப்பை முடித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
பலர் இன்னும் படித்து வரும் நிலையில், ‘அகரம்’ மூலம் பயனடைந்தவர்களில் 70 விழுக்காட்டினர் பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது.
“என் தங்கைகள் ‘அகரம்’ அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் பயனடைந்து வருகின்றனர். எப்போதுமே பெண்களுக்கு 70 விழுக்காடு இடம் இருக்கவேண்டும் என்பதை ஒரு விதிமுறையாகவே பின்பற்றி வருகிறோம்.
“படிப்பை முடித்த பிறகும், மாணவிகளுக்கு என்ன செய்யலாம் என்று ஒரு குழுவாக அமர்ந்து யோசித்தோம்.
“அப்போதுதான் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளட்டக்கிய ‘ஸ்டெம்’ (STEM) படிப்பிலும் அது சார்ந்த துறையிலும் பெண்களுடைய பங்களிப்பு 30 விழுக்காடுதான் உள்ளது என்பது தெரியவந்தது.
“இது வெறும் படிப்பு மட்டும் கிடையாது. ‘கிரியேட்டிவிட்டி’, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, புதுமை என அனைத்தும் அடங்கி உள்ளன,” என்றார் சூர்யா.
திறமை இருந்தும் இதுபோன்ற குறிப்பிட்ட சில தளங்களில் பெண்கள் ஏன் சாதிக்கவில்லை எனும் கேள்வி தம் மனதில் எழுந்ததாகக் குறிப்பிட்ட அவர், நன்கு யோசித்த போதுதான் பெண்களுக்கு இவ்விஷயத்தில் முன்மாதிரியாக யாருமே இல்லை என்பது தெரியவந்தது என்றார்.
“பெண்கள் நமக்கு கண்காணிப்புக் கருவிகள், காணொளி அழைப்பு என ஏகப்பட்ட விஷயங்களைக் கண்டுபிடித்துத் தந்துள்ளனர்.
“இந்தியாவுடைய அக்னி ஏவுகணையில் டெஸ்ஸி தாமஸ், இஸ்ரோவில் மங்கல்யான் உள்பட 14 திட்டங்களை உருவாக்கியதில் விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
“ஆனால் வழக்கம்போல் எல்லா இடத்திலும் கவனிக்கப்படுகிற, பாராட்டப்படுகிற, பேசப்படுகிற நபர்களாக ஆண்கள் மட்டும்தான் இருந்துள்ளனர்.
“என்னைச் சுற்றி உள்ள பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ‘அகரம்’ அமைப்பை நடத்துபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான். அவர்களால் முடியாதது எதுவுமே இல்லை. இதை நான் முழுமையாக நம்புகிறேன்,” என்றார் சூர்யா.
பள்ளியில், கல்லூரிகளில் அதிக தேர்ச்சி பெறுவது மாணவிகள்தான் என்று குறிப்பிட்ட அவர், அதன் பிறகு அந்தப் பெண்கள் என்னவாகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்றார்.
உலகம் முழுவதும் உயர்கல்வி ஆராய்ச்சி படிப்பில் பெண்களின் பங்கு 30 விழுக்காடு குறைவாக இருப்பதாய் சுட்டிக்காட்டிய சூர்யா, கண்டுபிடிப்புகளில் பெண்கள் முக்கிய பங்காற்றியும் ஆண்களே பெயர் பெறுவதாக தெரிவித்தார்.
உடல்வலிமை கொண்ட விளையாட்டுகளில்கூட பெண்கள் உயரம் தொடுவதாக சூர்யா பெருமிதம் தெரிவித்தார். பின்னர் மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.