புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நடக்கும் ஜி20 உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கையில் வைக்கப்பட்டு இருந்த பெயர் இந்தியாவுக்குப் பதிலாக ‘பாரத்’ என்று இருந்தது.
ஜி20 உச்சநிலை மாநாட்டில் உரையாற்றியப் பிரதமரும் பாரத் என்ற பெயரைக் குறிப்பிட்டார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்தியா, பாரத் என்ற இரண்டு பெயர்களும் அந்த நாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. என்றாலும் இதுநாள் வரை இந்தியா என்ற பெயர் தான் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜி20 தலைவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழை விநியோகித்த இந்திய அதிபர் திரௌபதி முர்மு, அந்த அழைப்பிதழில் பாரத அதிபர் என்று தன்னை தெரிவித்துக் கொண்டு இருந்தார்.
புதுடெல்லி ஜி20 மாநாட்டில் இந்தி மொழியில் பாரத் என்ற பெயரும் ஆங்கிலத்தில் இந்தியா என்ற பெயரும் மேடையில் எழுதப்பட்டு இருந்தன.
ஜி20 மாநாட்டில் இந்தி மொழியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜி20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் பாரதம் உலகத் தலைவர்களை வரவேற்கிறது என்று அறிவித்தார்.
தலைநகர் புதுடெல்லியில் US$300 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு உள்ள பாரத் மண்டபம் என்ற ஒரு மாநாட்டு நிலையத்தில் ஜி20 கூட்டம் நடக்கிறது. அந்த இடத்திற்கு எதிரே 16வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை அமைந்து இருக்கிறது.
இந்தியாவிற்கு பாரதம் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று இப்போது ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா என்ற பெயரைச் சூட்டியதாகவும் அதை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தலில் பிரதமர் மோடியின் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று முடிவு செய்து எதிர்க்கட்சிகள் சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்து இருக்கின்றன.
இதன் காரணமாகத்தான் மோடியின் பாஜக கட்சி இப்போது இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதில் தீவிரம் காட்டுகிறது என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகிறார்கள்.