தெலுங்கானா: பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை திருடிய கொள்ளையன் டீசல் தீர்ந்ததால் பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்தது.
தெலுங்கானாவின் சித்திபேட்டை அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான சுவாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் பேருந்தைப் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தினார்.
ஆனால் பேருந்தின் சாவியை அவர் எடுக்க மறந்துவிட்டார். அன்றிரவு அங்கு வந்த ஒருவர் பேருந்தை எடுத்துக்கொண்டு வெமுலவாடா சென்றார்.
பின்னர் அங்கிருந்து ஹைதராபாத் செல்வதாகக் கூறி சுமார் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த ஆடவர், பயணிகளிடம் டிக்கெட் கொடுக்காமல் கட்டணம் மட்டும் பெற்றுக்கொண்டு பாதி வழியில் நடத்துநர் வருவார் எனக் கூறினார்.
ஆனால் ஹைதராபாத் செல்லும் முன்பே பாதி வழியில் பேருந்து நின்றதால் பயணிகளிடம் வசூலித்த பணத்தை சுருட்டிக்கொண்டு அந்த ஆடவர் தப்பியோடினார்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறையினர், பேருந்தை மீட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.