திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா கிருமித் தொற்று 2வது அலை இல்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கேரளாவில் இந்நோய்த் தொற்றுக்கு கோழிக்கோடு மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரக்குழுவும் கேரளாவில் முகாமிட்டு நோய்த் தொற்று கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை முடுக்கிவிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மாவட்டத்தில் அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் 23ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையினரின் சோதனையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் 1192 பேர் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதில் 97 பேர் அடையாளம் கண்டறியப்பட்டனர்.
அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் பாதிப்பு இல்லை என தெரிந்தது.
செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், “மாநிலத்தில் ஆறு பேருக்கு நிபா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் நான்கு பேர் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
கடந்த 2 நாட்களில் புதிய நேர்மறை வழக்குகள் எதுவும் இல்லை. 51 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் ஒரு சில நாள்களில் தெரியவரும்.
மேலும் தீவிரக் கட்டுப்பாடு உள்ள மண்டலங்களில் உள்ள 22,008 வீடுகள் கண்காணிக்கப்பட்டுள்ளது.
இதில். நிபா கிருமித் தொற்று 2வது அலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.