புதுடெல்லி: கடும் புகைமூட்டத்தால் இந்தியத் தலைநகர் புதுடெல்லி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் செயற்கை மழையைப் பயன்படுத்த அந்நகரத்தின் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
புதுடெல்லியில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரமாக புகைமூட்டம் காரணமாக டெல்லி முடங்கியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் டெல்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சட்ட ரீதியான ஒப்புதல் கிடைத்து, வானிலையும் ஏற்புடையதாக இருந்தால் இம்மாதம் 20ஆம் தேதி வாக்கில் செயற்கை மழையைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
புகைமூட்டம் காரணமாக டெல்லியில் குளிர்காலத்தின்போது காற்றின் தரம் மோசமடைகிறது.