நாம் வாழும் இன்றைய நவீன உலகத்தின் வேகத்துக்கு ஏற்ப செல்லும் நமக்கு, போதிய உறக்கம் கிடைப்பது சற்று கடினம் என்றால் அது மிகையாகாது. தூக்கமின்மையைப் பற்றி தமிழ் முரசுடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் சரண்யா கணேசன்.
பெரியவர்கள் இரவில் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும் என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசன் பரிந்துரைக்கிறது.
போதுமான தூக்கத்துக்கும் சரியான தூக்கத்துக்கும் உள்ள வேறுபாடு
“போதும் என்று கருதப்படும் தூக்கத்தின் காலம் தனிநபர்களிடையே வேறுபடலாம். தூக்கம் நீடிக்கும் காலம் மற்றும் தூக்கத்தின் தரம், இவை இரண்டும் ஒன்றிணைந்தால், சரியான தூக்கத்தைப் பெற முடியும்,” என்கிறார் மருத்துவர் சரண்யா.
சிங்கப்பூரில் மக்கள் குறைந்த நேரம் உறங்குகின்றனர் என்று ஹெல்த்ஹப் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.
மேலும், நால்வரில் ஒருவர் மட்டுமே தினந்தோறும் ஏழு மணி நேரம் உறங்குவதாக யூகவ் நடத்திய மற்றோர் ஆய்வு விளக்கியது.
ஆய்வுகளில் சிங்கப்பூரர்கள் பலருக்கும் போதிய தூக்கம் கிடைப்பதில்லை என்று தெரியவந்துள்ள நிலையில், தூக்கமின்மையை எவ்வாறு அடையாளம் காணலாம்? தூக்கமின்மையால் ஏற்படும் ஆபத்துகள் யாவை?
“மனநிலையில் தடுமாற்றம், சிந்தனை குறைதல், எதிர்வினை நேரம் குறைதல், எரிச்சல் அதிகரிப்பு மற்றும் ஆற்றலின்மை ஆகியவை தூக்கமின்மையின் சில அறிகுறிகளாகும். ஒருவருக்கு சரியான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் அவரின் வாழ்க்கைத் தரம் குறைகிறது. மேலும், அவர் அதிக நோய்களுக்கு ஆளாகிறார். அவரின் அன்றாடச் செயல்பாடும் கணிசமாக பாதிக்கப்படும்,” என்கிறார் மருத்துவர் சரண்யா.
நல்ல உறக்கம் பெற தற்போது பலதரப்பட்ட வழிகள் உள்ளன. அதில், சிறந்த தூக்கத் தரத்திற்காக விளம்பரப்படுத்தப்படும் தூக்க மாத்திரைகள், அதாவது ‘மெலடோனின்’ மாத்திரைகள் தற்போது சந்தையில் உள்ளன.
இந்த மாத்திரைகள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றன?
“இந்த மாத்திரைகளை உட்கொள்வதற்குமுன் மருத்துவ ஆலோசனை பெறுமாறு நான் பரிந்துரைக்கிறேன். இந்த மருந்துகளின் அளவு வேறுபடுவதால், சான்றளிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே மருந்தின் அளவைப் பரிந்துரைக்க வேண்டும். அவற்றை உட்கொள்வதற்குமுன், உண்மையான பிரச்சினை என்ன என்பதை நீங்கள் அடையாளம் காண வேண்டும்,” என்று மருத்துவர் சரண்யா கூறினார்.
தரமான உறக்கத்திற்கான வழிமுறைகள்
“தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதையும் விழிப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும். தூங்குவதற்கு ஓரிரு மணி நேரத்திற்குமுன் மின்னணு சாதனங்களை தவிர்க்கவும். மேலும், உறங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு ‘கேஃபேன்’ தவிர்ப்பது நல்லது. உறங்கும் முன் ஒரு குவளை வெது வெதுப்பான பாலை அருந்துவதால் நல்ல உறக்கம் கிடைக்கும்,” என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் சரண்யா.
நல்ல தூக்கம் நன்மை பயக்கும். ஆனால் தூங்கும் நேரமும் காலமும் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதைத் தீர்மானிக்க உதவும். நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் நாம் தொடர்ந்து ஈடுபட்டால், உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.