பாலியல் வன்முறைச் சம்பவத்தைப் பற்றி எழுதிய சிங்கப்பூர் செய்தியாளருக்கும் இந்தியச் செய்தியாளருக்கும் இடையேயான மாறுபட்ட கண்ணோட்டங்களைச் சித்திரிக்கிறது ‘சாகசி டேட்லைன் சிங்கப்பூர்’ எனும் குறும்படம்..
வழக்கமாகத் தாம் எடுக்கும் நகைச்சுவை, குணச்சித்திரத் திரைப்படங்களுக்கு மாறானது, நடைமுறை வாழ்க்கைக் கோரங்களைப் பற்றிய இந்தப் படம் என்று அதன் நிர்வாகத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான சுனிதா லேட் பாம்ரே தெரிவித்தார்.
இதுவரை எட்டுத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த 27 நிமிடக் குறும்படம், தற்போது யூடியூப் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. படப் பணிகளை நிறைவு செய்வதற்கு ஓராண்டானது. படத்தின் தொழில்நுட்பப் பணிகள் பலவற்றை மும்பையைச் சேர்ந்த திரைத்துறை வல்லுநர்கள் முடித்துக்கொடுத்தனர்.
படத்தின் கதை, 2012ஆம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை ஒட்டியது.
“கதை சுருக்கமாக இருந்தாலும் அதன் கூறுகள் நுட்பமானவை. அவற்றை நாங்கள் இயன்ற அளவு கவனத்துடனும் மரியாதையுடனும் கையாள முயன்றோம்,” என்றார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஸாஃபர் அஞ்சும்.
டிசம்பர் 2012ல் புதுடெல்லியில் நகரும் பேருந்தில் நிகழ்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைப் பற்றி எழுதிய செய்தியாளர்களில் ஒருவரான குர்தீப் சிங், இந்தக் குறும்படத்தில் நடித்துள்ளார்.
தென்கிழக்காசியாவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ள இவர், அச்சம்பவத்தைப் பற்றி எழுத நேர்ந்தது மிகவும் துரதிஷ்டவசமானது என்றார்.