சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக தொழிற்சபை, சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கு உலகளாவிய அளவில் கூடுதல் வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளைத் தேடித் தர, இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஜனவரி 27ஆம் தேதியன்று கையெழுத்திட்டது.
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக தொழிற்சபை (ஜிசிசிஐ), பங்ளாதேஷ் வர்த்தக முதலீட்டு அமைப்பு (டிஐபி) ஆகியவற்றுடன் இந்த ஐந்தாண்டுகால ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
“இதன்வழி நாடுகளுக்கிடையே ‘டிஜிட்டல் மார்கெட்டிங்’ போன்ற இணையவழி சேவைகளையும் எளிதில் பரிமாறிக் கொள்ளமுடியும். சிங்கப்பூரர்களுக்குப் பொருளியல் வாய்ப்புகளும் அதிகரிக்கும்,” என்றார் சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக தொழிற்சபைத் தலைவர் டாக்டர் சின்னு பழனிவேலு.
“சிங்கப்பூர், பங்ளாதேஷ், அமெரிக்கா, தெற்காசியா ஆகியவற்றில் நிறுவனங்கள் காலடி எடுத்துவைத்து விரிவடைவதற்கு இது வழிவகுக்கும்,” என்றார் ‘ஜிசிசிஐ’ தலைமை நிர்வாகி மற்றும் ‘டிஐபி’ நிறுவனர் திரு முகமது ஜாய்னல் ஆபிதீன். அவர் சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக தொழிற்சபையின் வாரிய ஆலோசகராகவும் பொறுப்பேற்றார்.
இந்த ஒப்பந்தங்களின்படி, இவ்வாண்டு மே மாதத்தில் சிங்கப்பூரிலும் செப்டம்பர் மாதத்தில் பங்ளாதேஷிலும் வர்த்தக மாநாடுகள் நடைபெறும்.
‘டிஐபி’யின் சிங்கப்பூருக்கான ஆலோசகராகவும் சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக தொழிற்சபையின் வாரிய ஆலோசகராகவும் குமாரி ஸ்ரீமதி தீபலட்சுமி ரவிச்சந்திரன், தொழிற்சபையின் கெளரவ வர்த்தக ஆலோசகராக திரு மைனுல் இஸ்லாம் பொறுப்பேற்றனர்.