சிங்கப்பூரைச் சேர்ந்த எட்டு வயது மாணவர் அஷ்வத் கௌசிக், ‘கிளாசிக்கல்’ சதுரங்க விளையாட்டில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய ஆக இளைய சதுரங்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
தனது 4 வயதிலிருந்தே சதுரங்கம் விளையாடிவரும் இவர், சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த போட்டியின் நான்காம் சுற்றில் 37 வயதான போலந்து கிராண்ட் மாஸ்டர் ஜசெக் ஸ்டோபாவைத் தோற்கடித்து சாதனை படைத்தார்.
ஒரு வாரம் முன்பு ஒன்பது வயதுக்குட்பட்ட, கிளாசிக்கல் செஸ்ஸில் கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த இளம் வீரர் என்ற செர்பியாவின் லியோனிட் இவானோவிச்சின் சாதனையை முறியடித்துள்ளார் அஷ்வத்.
இதுவரையில் 8 வீரர்கள் மட்டுமே பத்து வயதுக்குட்பட்ட நிலையில் கிளாசிக்கல் சதுரங்க கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்த பெருமையைப் பெற்றவர்கள். அதில் அஷ்வத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“சதுரங்கம் விளையாடுவது எனக்கு உற்சாகமாக இருக்கும். தந்தையின் அறிவுறுத்தலின்படி தன்னம்பிக்கையுடன் விளையாடி வெற்றிபெற்றது மகிழ்ச்சி,” என்றார் அஷ்வத்.
மேலும், 37 வயதான கிராண்ட் மாஸ்டருடன் விளையாடுவது குறித்துத் தனக்குப் பயமில்லை எனச் சொல்லும் அஷ்வத், தன் பயிற்சி மீது அசைக்க முடியாத நம்பிக்கையும், எதிரே இருப்பவர் செய்யும் தவறான காய்நகர்த்தலின் மீது நாம் கவனமாக இருந்தால் யாரையும் வெல்லலாம் என்று துணிவுடன் சொல்கிறார்.
தனியார் ஆலோசனை நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணிபுரியும் அஷ்வத்தின் தந்தை கௌசிக் ஸ்ரீராம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் சதுரங்கம் குறித்த நுணுக்கங்களைப் படித்து மகனுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். அவ்வப்போது சதுரங்க நிபுணர்களைத் தொடர்புகொண்டு மகனுக்கு வழிகாட்டுகிறார்.
உலகெங்கிலும் நடக்கும் சதுரங்கப் போட்டிகள் குறித்து இணையம் மூலம் தகவல் திரட்டுவது, அவற்றுக்கு விண்ணப்பிப்பது, கலந்துகொள்ள மகனை அழைத்துச்செல்வது போன்ற பொறுப்புகளை தாயார் ரோகிணி ஏற்றுள்ளார். பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த இவர், அஷ்வத்தின் சதுரங்க ஈடுபாடு தொடர்பில் அதிகம் நேரம் செலவிட வேண்டும் என்பதால், பணியில் இருந்து விலகிப் பிள்ளைகளுக்காகவே தன் நேரத்தை ஒதுக்குகிறார்.
இவ்வாறு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதால், நேரத்தை நிர்வாகம் செய்யமுடிவதாகச் சொல்கின்றனர் அஷ்வத்தின் பெற்றோர்.
“கொள்ளைநோய்க் காலகட்டத்தில் பயிற்சி எடுக்க அஷ்வத்திற்கு அதிக நேரம் கிடைத்தது. பல இணைய வழிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற வாய்ப்புக் கிட்டியது. அஷ்வத் பெற்ற வெற்றிகளையும், சதுரங்க விளையாட்டில் அஷ்வத்திற்கு இருந்த ஆர்வத்தையும் பார்த்து அனைத்துலகப் போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்குவித்தோம். அவன் வெற்றிபெற்றது பெருமையளிக்கிறது,” என்றார் தாயார் ரோகிணி.
கல்வியிலும் சிறந்து விளங்கும் அஷ்வத், எதிர்காலத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதோடு, உலக சாம்பியன் பட்டம் பெறவேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்.