நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாளிகள் தயங்கலாம். ஆனால், அத்தகைய நீக்குப்போக்கு இல்லையெனில் திறனாளர்களை ஈர்க்க, தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகலாம் என்ற பயம் அவர்களுக்கு உண்டு.
நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகள் தொடர்பான வழிகாட்டிகளை முத்தரப்புப் பணிக்குழு ஒன்று வரையறுத்து வருவதற்கு இடையே இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இவ்வாண்டின் பிற்பாதியில் வழிகாட்டிகள் நடப்புக்கு வரும்போது முதலாளிகள் அவற்றைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்படும்.
“இத்தகைய வேலை ஏற்பாடுகளால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படுவது குறித்து முதலாளிகள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில், ஒரு சில வேலைகளை வீட்டில் இருந்தபடி செய்ய முடியாது,” என்றார் மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங்.
நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ள ‘ஏஷியஒன் ஆன்லைன்’ செய்தித்தள நிறுவனத்திற்கு ஜனவரி 31ஆம் தேதியன்று திருவாட்டி கான் சென்றிருந்தார்.
11 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவுக்குத் தலைவராக இருக்கும் அவர், வெவ்வேறு வகையான நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகளை முதலாளிகள் வரவேற்கவும் அவற்றின் தொடர்பில் புதுமை நிகழ்த்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகளால் தங்களின் வேலையில் ஊழியர்கள் கூடுதல் காலம் நீடிக்க முடிவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
நீக்குப்போக்கு இருப்பதால் வேலை செய்யும் ஊக்கமும் பிறப்பதாக ‘ஏஷியஒன் ஆன்லைன்’ பேச்சாளர் டான் தியாம் பெங் கூறினார். புதிய ஊழியர்களையும் நிறுவனம் ஈர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வழிகாட்டிகள் வெளியிடப்படும்போது நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகளைக் கோரும் செயல்முறை வழக்கமான ஒன்றாகக் கருதப்படும் என்று திருவாட்டி கான் தெரிவித்தார்.