உடற்குறையுள்ளோரும்,சமூகத்தில் வாழும் மற்ற மக்களைப் போலவே ஒரு சிறந்த நோக்கமுள்ள வாழ்க்கையை வாழவேண்டும் என்று உறுதிபூண்டுள்ளனர் என 2023ஆம் ஆண்டுக்கான ‘கோ சோக் தோங் எனெபில்’ விருது வழங்கும் விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் கூறினார்.
அவர்கள் அவ்வாறு வாழ சமூகத்தில் இருக்கும் அனைத்து மக்களின் கூட்டுப் புரிதல் தேவை என அதிபர் மேலும் குறிப்பிட்டார். பொதுமக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படுத்த மேலும் அதிகமாகச் செயலாற்ற வேண்டும் என்றார் அவர்.
இவ்விருது வழங்கும் விழா இஸ்தானாவில் டிசம்பர் 11ஆம் தேதி நடைப்பெற்றது. உடற்குறையுள்ளோரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இரு பிரிவுகளில் 14 பேருக்கு அதிபர் விருதுகளை வழங்கினார்.
முதல் பிரிவில், தங்கள் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி மற்றவர்களுக்கு ஊக்கமளித்தவர்களுக்கு வழங்கப்படும் சாதனையாளர் விருது, சிங்கப்பூரின் புகழ்பெற்ற வீராங்கனையான லாரன்ஷியா டான் உட்பட மூவருக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது பிரிவில், தங்களுடைய துறையில் உற்சாகத்தோடு மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும் என்பதற்காகவும் திறம்பட சமூகத்திற்குச் சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவும் 10 பேருக்கு உற்சாக விருது வழங்கப்பட்டது.
வியட்னாமில் காது கேளாதோருக்கும் செவித்திறன் குறைபாடுள்ளோருக்கும் சேவை செய்யும் லாப நோக்கற்ற அமைப்பான ‘ஹியரிங் வியட்னாம்’ எனும் அமைப்பை நிறுவிய, மறைந்த திரு ராஜ்பால் நிரத் சிங்கிற்கு இறப்புக்குப்பின் அளிக்கப்படும் கௌரவ விருது வழங்கப்பட்டது.
அதிபர் தர்மன் தமது உரையில்,“நம் மேசைகள்மீது வைக்கப்பட்டுள்ள மெல்லிழைத்தாள் பொட்டலங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல ‘வேறுபாட்டைக் களையுங்கள்’. அது இன்னும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது,”எனக் கூறினார்.