ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகில், சென்ற வார இறுதியில் ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மற்றொருவர் கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டார்.
டிசம்பர் 10 ஆம் தேதி இரவு 7.10 மணியளவில் 20 வயது ஆடவர் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டதெனவும் அவருடைய உடல் டிசம்பர் 11ஆம் தேதி மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் இச்சம்பவத்தைப் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது .
தவறு ஏதும் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் இல்லை.
சீன நாளிதழான சாவ்பாவிற்கு வாசகர் ஒருவர் அனுப்பிய படத்தில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் காவல்துறையின் நீல நிறக் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததும் ஒரு பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததும் காணப்பட்டது. அதற்குப் பின்னால் பார்வையாளர்கள் கூடியிருந்ததையும் அப்படத்தில் காண முடிந்தது.
ஈஸ்ட் கோஸ்ட் லகூன் ஃபுட் வில்லேஜிற்கு அருகில் காணாமற்போனதாகக் கூறப்பட்டவர்களில்
மற்றொருவரை, காவல்துறையின் சுற்றுக்காவல் பிரிவின் உதவியோடு, கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் கண்டுபிடித்து மீட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த ஆடவரின் உடல்நிலை மருத்துவ உதவியாளர்களால் பரிசோதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டார் எனக் கூறப்பட்டது