சிங்கப்பூரில் உள்ள அடுக்குமாடி வீடுகளிலிருந்து சன்னல்கள் கீழே விழுந்து உடையும் சம்பவங்கள் சற்று அதிகரித்துள்ளன. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து நவம்பர் வரை அத்தகைய 35 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 19 சம்பவங்கள் சன்னல் சட்டங்களால் ஏற்பட்டவை.
ஆனால் 2022ஆம் ஆண்டு முழுவதும் 33 சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. இவற்றில் 17 சம்பவங்கள் சட்டங்களின் பிடி தளர்ந்ததால் சன்னல்கள் விழுந்து நொறுங்கின. 15 சம்பவங்கள் பக்கவாட்டில் தள்ளும் சன்னல்கள் என்று கட்டட, கட்டுமான ஆணையத்தின் (பிசிஏ) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டில் சன்னல் விழுந்த சம்பவங்களில் 15 பக்கவாட்டில் தள்ளும் சன்னல்கள் தொடர்பானைவை என்று டிசம்பர் 12ஆம் தேதி அன்று பிசிஏ, வீவக வெளியிட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது.
இவ்வாண்டு சன்னல்கள் விழுந்த சம்பவங்களில் யாரும் காயம் அடையவில்லை.
சன்னல் சட்டங்களைப் பிடித்துள்ள ஆணி காலப்போக்கில் துருப்பிடித்து, தேய்ந்து பலவீனமடைவதால் சன்னல்கள் விழுந்து நொறுங்குகின்றன.
பக்கவாட்டு சன்னல்கள் தொடர்பான சம்பவங்களில் நகரும் சன்னல்களைப் பிடித்துள்ள பிடிப்பான்கள் தளர்ந்துவிடுவதால் ஏற்படுகின்றன.
சன்னல்கள் பாதுகாப்பாக இருப்பதை வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பிசிஏ அறிவுறுத்தியுள்ளது.
தேய்ந்துபோன பிடிமான்களை மாற்ற வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.
“சிங்கப்பூர் அடர்த்தியாகக் கட்டப்பட்ட கட்டட சுற்றுச்சூழலைக் கொண்டிருக்கிறது. மேலும் பல உயரமான கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. உயரத்தில் இருந்து விழும் கண்ணாடித் துண்டுகள், கடுமையான காயங்களை ஏற்படுத்துவதோடு, பிற கடுமையான விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது,” என்று பிசிஏ குழுமத்தின் அதிகாரியான தனபால் காளியண்ணன் தெரிவித்தார்.
“இத்தகைய அபாயங்களைக் குறைக்க, வீட்டு உரிமையாளர்களும் குடியிருப்பாளர்களும் வீட்டு சன்னல்களைத் தவறாமல் சரிபார்த்து பராமரித்து தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.