பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூரின் பவிலியன் கேஎல் கடைத்தொகுதியின் உட்கூரையில் அலங்காரத்திற்காகத் தொங்கவிடப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் அறுந்து விழுந்ததில் ஜூலியஸ் லீ எனும் சிங்கப்பூர் ஆடவருக்குக் காயம் ஏற்பட்டது.
சம்பவத்தின்போது 44 வயது லீ, தன் மனைவி அய்லீன் டானையும் மகளையும் படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
“குடை ராட்டினத்திற்கு வெளியே நின்று என் கணவர் படம் எடுத்தார். அப்போது திடீரென்று கிறிஸ்துமஸ் மரம் அவர் மீது அறுந்து விழுந்தது,” என்று திருவாட்டி டான், 39, கூறினார்.
தலையில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தன் கணவரை கடைத்தொகுதி நிர்வாகத்தினர் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று வயது மகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட டிசம்பர் 20ஆம் தேதி தாங்கள் மலேசியா சென்றதாக அந்த மாது சொன்னார்.
கடைத்தொகுதியின் பாதுகாப்பு, நிர்வாகப் பிரிவினர், அறுந்து விழுந்த அலங்கார கிறிஸ்துமஸ் மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து பவிலியன் கேஎல் கடைத்தொகுதி வருத்தம் தெரிவித்துள்ளது.
அலங்காரப் பொருள்கள் அனைத்தும் முழுமையாகச் சோதிக்கப்படும் என்று அது உறுதியளித்துள்ளது.