டிசம்பர் மாதத்தில் 100க்கும் அதிகமானோர் வங்கி பெயரில் செய்யப்பட்ட மோசடிகளுக்கு இரையாகியுள்ளனர்.
மோசடிக்காரர்கள் வங்கியில் இருந்து அனுப்பப்படுவது போன்ற போலிக் குறுஞ்செய்திகள் அனுப்பி, அவர்களின் இணைய கணக்குகளுக்குள் நுழைந்துள்ளனர்.
இத்தகைய மோசடிகள் மீண்டும் தலைதூக்குவது குறித்து காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) வெளியிடப்பட்ட அறிக்கையில் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் வங்கிகள் அனுப்புவது போன்ற அங்கீகரிக்கப்படாத பயன்பாடு குறித்த போலி எச்சரிக்கைக் குறுஞ்செய்திகளை + 65 என்று தொடங்கும் எண்களிலிருந்து பெற்றனர்.
அதில் போலியான வங்கியின் இணையத்தள இணைப்புகள் இருந்தன. தங்கள் பயனாளர்பெயர், மறைச்சொல், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தப்படும் மறைச்சொல் (ஓ.டி.பி) ஆகியவற்றை தெரிவிக்கும் வகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டனர்.
சில சந்தர்ப்பங்களில், வங்கி பாதுகாப்பு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்களிடமிருந்து வாட்ஸ்அப் செய்திகள் பெறப்பட்டுள்ளன. அந்த ஏமாற்றுக்காரர்கள் மின்-பணப்பைகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைக் காட்டும் போலி வங்கி அறிக்கைகளை வழங்கினர்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைக் கவனித்தபோதுதான் இந்த ஏமாற்று வேலை கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகைய மோசடிகளில் ஏமாறாமல் இருக்கும் ஸ்காம்ஷீல்ட் (ScamShield)செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.
பரிவர்த்தனை வரம்புகள், இணைய வங்கிச் சேவை, இ-பணப்பைகளுக்கு ஈரடுக்கு அல்லது பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களை அமைக்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
மோசடி அறிகுறிகளை அறிந்தால், அதிகாரிகளுடன் சரிபார்க்குமாறும், ஓ டி.பி உள்ளிட்ட தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை ஒருபோதும் யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் குறித்து புகாரளிக்க அல்லது உதவி நாட பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மோசடி பற்றிய கூடுதல் தகவல்களுக்கு அல்லது மோசடி நடவடிக்கைகள் குறித்து புகாரளிக்க, www.scamalert.sg என்ற இணையத் தளத்தைக் காண்க அல்லது மோசடிகளுக்கு எதிரான நேரடி உதவி எண்ணை (1800 722 6688) அழைக்கவும்.