சீனாவுக்கு வங்கிகள் அல்லது வங்கி அட்டைகள் மூலமாக இல்லாமல் வேறு வழிகளில் பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை நீட்டிப்பது குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையம் இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு பரிசீலனை செய்யும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமையன்று (ஜனவரி 10) நாடாளுமன்றத்தில் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் ஜெரால்ட் கியாம் எழுப்பிய கேள்விக்கு திரு டான் பதிலளித்தார்.
சிங்கப்பூர் நாணய ஆணையம், வங்கிகள், வங்கி அட்டைகளுக்குப் பதிலாக மாற்று வழிகளின் முலம் சீனாவுக்குப் பணம் அனுப்புவதை மொத்தமாகவே தடை செய்யுமா அல்லது தற்காலிகத் தடை நீட்டிக்கப்படுமா என்று திரு கியாம் கேட்டார்.
அவ்வாறு மாற்று வழிகளில் சீனாவுக்குப் பணம் அனுப்பும் சேவைகளை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பணம் அனுப்பும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.