ஆட்குறைப்பு செய்யப்பட்டோரும் இதர ஊழியர்களும் புதிய வேலைகளைத் தேடுவதன் தொடர்பில் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்த புதிய வழிகாட்டிக் குறிப்புகளை அரசாங்கம் உருவாக்கி வருவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
தொழிற்சங்கங்கள், முதலாளிகள் ஆகிய தரப்புகளுடன் இணைந்து அரசாங்கம் அதை உருவாக்குவதாக பிப்ரவரி 6ஆம் தேதி அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் (2024) பிற்பாதியில் அந்த வழிகாட்டிக் குறிப்புகள் வெளியிடப்படும்.
தற்போது நடப்பிலிருக்கும் கூடுதல் மனிதவளத்தை நிர்வகித்தல், பொறுப்புள்ள முறையில் ஆட்குறைப்பு செய்தல் ஆகியவை தொடர்பான முத்தரப்பு ஆலோசனை, ஆட்குறைப்பு பற்றி மனிதவள அமைச்சிடம் தெரிவிப்பது தொடர்பான முத்தரப்பு வழிகாட்டிக் குறிப்புகள் ஆகியவற்றுக்கு மேலாக புதிய வழிகாட்டிக் குறிப்புகள் உருவாக்கப்படுகின்றன.
அண்மையில் லசாடா நிறுவனம் ஆட்குறைப்பு செய்த நிலையில், சிங்கப்பூரில் ஆட்குறைப்பு தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக டாக்டர் டான் அந்தத் தகவல்களை வெளியிட்டார்.