அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இதையடுத்து, அகமதாபாத் நகருக்கான விமானப் பயணச்சீட்டு விலை எட்டு மடங்கு உயர்ந்துள்ளது; ஹோட்டல் அறை வாடகைக் கட்டணம் 29 மடங்கு கூடிவிட்டது; வாடகை கார் கட்டணம் இதற்குமுன் இப்படியொரு நிலையை எட்டியதில்லை; மதுவிலக்கு நடப்பிலிருக்கும் குஜராத்தில் அதற்கு விதிவிலக்கு கோரி விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
பணக்காரர்களையும் புகழ்பெற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் அகமதாபாத்திற்குப் பறக்கவிருக்கின்றன.
ஹைதராபாத்திலிருந்து அகமதாபாத் நகருக்கு ஆகக் குறைவான ஒருவழி விமானப் பயணக் கட்டணம் 40,000 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
அதுபோல், வழக்கமாக நாளொன்றுக்கு ரூ.6,500 முதல் ரூ.12,500 வரை இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதி அறை வாடகை இவ்வார இறுதியில் ரூ.25,000 முதல் ரூ.200,000ஆக உயர்ந்துள்ளது.
சாதாரணத் தங்குவிடுதிகளிலும் அறை வாடகை பத்து மடங்கிற்குமேல் கூடிவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
“இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கு முன்னரே அகமதாபாத் நகருக்கான விமானப் பயணக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துவிட்டன. அதன்பின் ஹோட்டல் கட்டணங்களும் விமானக் கட்டணங்களும் ஆறு முதல் எட்டு மடங்கு கூடிவிட்டன. இதனை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை,” என்றார் ‘யாத்ரா ஆன்லைன்’ நிறுவனத்தின் பரத் மாலிக்.
இதனிடையே, போட்டி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்க அனுமதிக்கக் கோரி விமான நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன என்றும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன என்றும் அகமதாபாத் விமான நிலைய வட்டாரங்கள் கூறின.