சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக் கிண்ண ஒருநாள் போட்டிக்குமுன் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சொன்னபடி நடந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அப்போட்டியில், இந்திய வீரர்களின் சுழற்பந்து வீச்சில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி 199 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் சரிவிற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார் ரவீந்திர ஜடேஜா. அவர் பத்து ஓவர் வீசி, 28 ஓட்டங்களை மட்டும் விட்டுத்தந்து, மூவரை ஆட்டமிழக்கச் செய்தார்.
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி முதலில் தடுமாறினாலும் பின்னர் பதற்றமின்றி ஆடி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது.
முன்னதாக, “ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். ஜடேஜாவிற்கு இன்று சிறப்பான நாள் காத்திருக்கிறது,” என்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார் தினேஷ் கார்த்திக்.
அவர் கணித்தபடி நடந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கார்த்திக், இம்முறை வருணனையாளராகச் செயல்பட்டு வருகிறார்.