ஹராரே: ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்டிரீக் ஞாயிற்றுக்கிழமை விடிகாலை காலமானார். அவருக்கு வயது 49.
இத்தகவலை அவருடைய குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, ஸ்டிரீக் இறந்துவிட்டதாக அண்மையில் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
ஆல்ரவுண்டரான ஸ்டிரீக், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், தம் கணவரின் நினைவாக நெஞ்சை உருக்கும் ஒரு பதிவைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்டிரீக்கின் மனைவி நடின்.
“2023 செப்டம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடிகாலையில் என் வாழ்வின் மிகச் சிறந்த அன்பரும் என் அழகான குழந்தைகளின் தந்தையையும் அவரின் வீட்டிலிருந்து தேவதூதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர். தாம் விருப்பப்பட்டபடி, தம் வாழ்நாளின் கடைசி நாள்களை அவர் தம் வீட்டிலேயே, தம் அன்பிற்குரியவர்களுடன் அவர் கழித்தார். எப்போதும் எங்கள் ஆன்மா உங்களுடன் இணைந்திருக்கும் ஸ்டிரீக்கி,” என்று நடின் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டிரீக் 65 டெஸ்ட் போட்டிகளிலும் 189 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி, 4,933 ஓட்டங்களைச் சேர்த்ததோடு, 455 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஸிம்பாப்வே, பங்ளாதேஷ் உள்ளிட்ட அனைத்துலக அணிகளுக்கும் இந்திய பிரிமியர் லீக்கில் (ஐபிஎல்) கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஸ்டிரீக் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்டார்.