மும்பை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் (ஐஓசி) ஏற்றுக்கொண்டுள்ளது.
மும்பையில் வெள்ளிக்கிழமையன்று நடந்த மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் அப்பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்ததாக, இம்மாதம் 14-16ஆம் தேதிகளில் மும்பையில் நடக்கவுள்ள அதன் அமர்வில் அப்பரிந்துரை வாக்கெடுப்பிற்கு விடப்படும்.
முன்னதாக, கிரிக்கெட்டுடன் பேஸ்பால்/சாஃப்ட்பால், கொடிக் காற்பந்து (ஃபிளாக் ஃபுட்பால்), லக்ராஸ், சுவர்ப்பந்து ஆகிய விளையாட்டுகளையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் ஆறு அணிகள் பங்கேற்கும் வகையில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்று ஐசிசி, லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் குழுவிடம் பரிந்துரை செய்திருந்தது.
அவ்வகையில், ஐசிசி டி20 போட்டித் தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும்.
கடைசியாக, 1900ஆம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அப்போது ஒரே ஒரு போட்டி மட்டுமே இடம்பெற்றது. அதில், கிரேட் பிரிட்டன் அணி பிரான்சைத் தோற்கடித்து, தங்கம் வென்றது. அப்போது, இரு நாள்கள் நடந்த அப்போட்டியில், டெஸ்ட் போட்டியைப்போல நான்கு இன்னிங்ஸ்கள் விளையாடப்பட்டன.