கொழும்பு: பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலகமீது விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற இலங்கை அணியில் குணதிலகவும் இடம்பெற்றிருந்தார்.
அப்போது, தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிட்டதாக ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் குணதிலகமீது புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் கைதுசெய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்ற மாதம் குணதிலக குற்றவாளியல்லர் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, கிரிக்கெட் விளையாட அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது தொடர்பில் தன்னிச்சையான விசாரணைக் குழுவை இலங்கை கிரிக்கெட் வாரியம் அமைத்தது.
அக்குழு அமைத்த பரிந்துரையின் அடிப்படையில், குணதிலக மீதான தடை உடனடியாக நீக்கப்பட்டு, அவர் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.