ஆசிய வெற்றியாளர் பூப்பந்து: இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி
துபாய்: ஆசிய வெற்றியாளர் பூப்பந்துப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென்கொரிய வீராங்கனை ஆன் செ யங்குடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து முதல் செட்டை 21-18 எனக் கைப்பற்றினார். ஆனால், அடுத்த இரண்டு செட்களை 5-21, 9-21 என்ற புள்ளிக் கணக்கில் இழந்து அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாத்விக், சிராக் ஜோடி, இந்தோனீசியாவை 21-11, 21-12 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு 500வது வெற்றி
ராவல்பிண்டி: அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 500வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் குவித்தது.
289 ஓட்டங்கள் என்ற இலக்குடன் பந்தடித்த பாகிஸ்தான் 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து, 500 போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. அவ்வணி இதுவரை 949 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த வகையில், ஆஸ்திரேலியா 594 வெற்றிகளுடன் முதலிடத்திலும் இந்தியா 539 வெற்றிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.
டோனி: அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்துவிட்டோம்
ஜெய்ப்பூர்: வியாழக்கிழமையன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி ஐந்தாவது வெற்றியைத் தனதாக்கியது.
இதுகுறித்து பேசிய டோனி, “நாங்கள் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் அதிகமான இலக்கை அவர்கள் நிர்ணயித்துவிட்டனர். அதற்கு காரணம் தொடக்க ஓவர்களில் (ஆறு ஓவர்களில் 64 ஓட்டங்கள்) நாங்கள் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததுதான்.
“ஆனால் அந்த சமயத்தில் ஆடுகளம் பந்தடிப்பிற்கு ஏற்றதாக இருந்தது. எங்களது பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் நன்றாகப் பந்து வீசினார்கள். கடின இலக்கு என்பதால் நாங்கள் தொடக்க ஓவர்களில் அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும்,” என்றார்.