நோம்பென்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தடை தாண்டும் ஓட்டத்தில் நேற்று சிங்கப்பூரும் தாய்லாந்தும் தங்கப்பதக்கத்தை பகிர்ந்துகொண்டன.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் சிங்கப்பூர் வீரர் ஆங் சென் ஸியாங்கும் தாய்லாந்து வீரர் நத்தாஃபோன் டன்சுங்ப்நோயெனும் ஓட்டத்தை கிட்டத்தட்ட சமமாக முடித்ததால் யார் வென்றது என்ற குழப்பம் சிறிது நேரம் நிலவியது.
புகைப்படக்காரர்களும் தங்களது கைப்பேசியில் காணொளிப் படம் எடுத்த செய்தியாளர்களும் படங்களைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து வெற்றியாளரைத் தேடினர்.
இருப்பினும் நத்தாஃபோனுக்கு தாய்லாந்து கொடி போர்த்தப்பட்டதும் வென்றது அவர்தான் என்பது சிறிது நேரம் நீடித்தது.
நத்தாஃபோன் 13.832 வினாடிகளிலும் ஆங் சென் 13.834 வினாடிகளிலும் ஓட்டத்தை முடித்தனர். 13.855 வினாடிகளில் ஓடி முடித்து வெண்கலத்தைப் பெற்றார் பிலிப்பீன்ஸ் வீரர் ஜான் கெபாங்.
சிங்கப்பூர் வீரர் ஆங் சென்னின் தங்கக் கனவு 0.002 வினாடிகளில் பறிபோனதாகக் கருதப்பட்டது. ஆயினும் நடுவர் குழு, தங்கப் பதக்கத்தை சிங்கப்பூர் வீரரும் தாய்லாந்து வீரரும் பகிர்ந்துகொள்வார்கள் என்று அறிவித்தது.
2022 ஹனோய் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடத்தில் வந்து வெள்ளிப் பதக்கம் பெற்றிருந்தார் ஆங் சென். பிலிப்பீன்ஸ் வீரர் கிளிண்டன் பாவ்டிஸ்டா அந்தப் போட்டியில் 14.127 வினாடிகள் தடை தாண்டும் ஓட்டம் ஓடி தங்கம் வென்றிருந்தார். நேற்றைய போட்டியில் அவரால் நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
தாய்லாந்து வீரருடன் சரிக்குச் சரி வேகம் காட்டிய ஆங், சில சாதனைகளுக்குச் சொந்தக்காரர். நேற்றைய போட்டியில் அவர் தமது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். 13.89 வினாடிகள் என்பது அவரது முந்தைய சாதனை.
மேலும், 33 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த பெருமையும் ஆங்கையே சேரும். 1989ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த போட்டியில் சிங்கப்பூரின் பசுபதி பரமேஸ்வரன் வெண்கலப் பதக்கம் பெற்றது ஆகக் கடைசிப் பதக்கம்.