லண்டன்: இப்பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் கா்றபந்துப் போட்டி இன்றுடன் முடிவுக்கு வர இருக்கிறது.
கடைசி மூன்று இடங்களில் போட்டியை முடித்துக்கொள்ளும் குழுக்கள் அடுத்த பருவத்தில் இரண்டாம் நிலை லீக் போட்டிக்குத் தள்ளப்படும்.
இந்நிலையில், லீக் பட்டியலில் 18, 19வது இடங்களைத் தவிர்க்க எவர்ட்டன், லெஸ்டர் சிட்டி, லீட்ஸ் ஆகிய குழுக்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.
லீக் பட்டியலில் 24 புள்ளிகளுடன் சவுத்ஹேம்டன் குழு கடைசி இடத்தில் உள்ளது.
அது ஏற்கெனவே இரண்டாம் நிலை லீக்கிற்குத் தள்ளப்பட்டுவிட்டது.
அடுத்த பருவத்தில் அது பிரிமியர் லீக் போட்டியில் இடம்பெறாது.
இந்த நிலையைத் தவிர்க்க சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு ஸ்பர்ஸ் குழுவுடன் மோதுகிறது லீட்ஸ் யுனைடெட். மற்றோர் ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டியும் வெஸ்ட் ஹேம் குழுவும் சந்திக்கின்றன.
கடந்த பல ஆண்டுகளாக பிரிமியர் லீக்கில் விளையாடி வரும் எவர்ட்டன், தொடர்ந்து அதன் பிரிமியர் லீக் அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ள இன்று போர்ன்மத்தைத் தோற்கடித்தே ஆக வேண்டும்.
யார் பிழைக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.