உலக உருட்டுப் பந்துப் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 17 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்றுள்ளது சிங்கப்பூர்.
குவைத்தில் நடைபெறும் ஐபிஎஃப் உலக உருட்டுப் பந்துப் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூர் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் இரண்டையும் வென்றுள்ளது. சக சிங்கப்பூரரான ஜாரிஸ் கோவை 184-179, 208-164 எனும் ஆட்டக்கணக்கில் வென்று தங்கத்தைக் கைப்பற்றினார் டேரன் ஓங்.
அரையிறுதிச் சுற்றில் ஜெர்மனியின் டோபியாஸ் போர்டிங்கை 208-222, 224-173, 225-213 எனும் ஆட்டக்கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் 27 வயது ஓங். 28 வயது கோ, அதே சுற்றில் கத்தாரின் கானிம் அபுஜசூமை 211-204, 248-242 எனும் ஆட்டக்கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
இருவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிரிவில் சிங்கப்பூருக்குத் தங்கம் கிடைப்பது உறுதியானது.