சிங்கப்பூர்: வியாழக்கிழமை இரவு (அக்.12) குவாம் குழுவுடன் உலகக் கிண்ணக் காற்பந்துக்கான தகுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது.
தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10,300க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குழுமியிருந்தனர். அவர்களுடன் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு வருகை அளித்திருந்தார். ஆட்டம் தொடங்குவதற்கு முன் இரு குழுக்களின் விளையாட்டாளர்களை அவர் கைகுலுக்கி வரவேற்று வாழ்த்தினார்.
ஆயினும், இந்த முதல் சுற்றின் கோல் எண்ணிக்கை குவாமில் அடுத்த செவ்வாய்க்கிழமை (அக். 17) நடக்கவிருக்கும் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற சிங்கப்பூருக்கு சவாலாக அமைந்துள்ளது.
சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கத் திடலின் தரமும் ரசிகர்களின் தொடர் ஆரவாரமும் சிங்கப்பூர் குழுவிற்கு தனி உத்வேகத்தைத் தந்தது. அவற்றின் பயனால் ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் கிரிஸ்டஃபர் வென் ஹுயிசென் மற்றும் 40வது நிமிடத்தில் ஜேக்கப் மெஹ்லர் இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர்.
முதல் பாதி ஆட்டம் சிங்கப்பூர் 2, குவாம் 0 என்று முடிய அரங்கில் இருந்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
பிற்பாதி ஆட்டத்தில் 60வது நிமிடத்தில் சிங்கையின் முன்னாள் காற்பந்து சகாப்தம் ஃபாண்டி அகமதின் புதல்வர் இல்ஹான் ஃபாண்டி களமிறங்கினார். 20 வயதே ஆன அவர் இரண்டு முறை கோல் அடித்தும் அவை நடுவரால் ஏற்றுக்கொள்ளப்படாதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. முட்டியில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு அனைத்துலக விளையாட்டில் மறுபடியும் அடியெடுத்து வைத்துள்ள இல்ஹானுக்கு அது பெரும் ஏமாற்றமாகப் போனது.
ஆட்டத்தின் 90வது நிமிடம் வரை ஜப்பானிய பயிற்றுவிப்பாளரான டாகாயுகி நிஷிகாயா மேற்பார்வையில் விளையாடிய சிங்கப்பூர் ஆட்டக்காரர்களின் கை ஓங்கியே இருந்தது. 108வது முறை சிங்கப்பூர் அணியைப் பிரதிநிதிக்கும் கோல் காப்பாளரான ஹசன் சன்னி, ஒரே ஒரு முறைதான் அதுவும் 27வது நிமிடத்தில் குவாம் குழுவின் கோல் முயற்சியைத் தடுத்தார்.
ஆனால் அனைவரும் வியப்படைய ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் குவாம் குழுவின் கேப்டன் ஜேசன் குன்லிஃபே ரசிகர்களின் மகிழ்வுக்கு அதிர்ச்சியை விளைவித்தார். ஒரு ஃபிரீ கிக் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி அரங்கமே அடங்கிப்போக, குவாம் குழுவின் கோலைப் போட்டார்.
இருப்பினும் ஆட்டம் முடியும்வரை சிங்கப்பூர் 2-1 என்ற அதன் கோல் எண்ணிக்கையை தற்காத்துக்கொண்டது. “குறுகிய கோல் எண்ணிக்கையானாலும் வெற்றி வெற்றிதான். அடுத்த ஆட்டத்தில் தன்முனைப்போடு செயல்பட உடலையும் மனதையும் நன்றாகத் திடப்படுத்தி குவாம் செல்வோம்” என்று சிங்கப்பூர் பயிற்றுவிப்பாளர் டாகாயுகி நிஷிகாயா தெரிவித்துள்ளார்.