அகமதாபாத்: கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கியது.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது.
இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள் திடலுக்குள் புக, அவர்களில் விராத் கோஹ்லியிடம் மட்டும் சிறுமாற்றம் தென்பட்டது.
சரியான சீருடையை அவர் அணியாததே அதற்குக் காரணம்.
சக வீரர்களது மேற்சட்டையின் தோள்பட்டையில் இந்திய தேசியக் கொடியிலுள்ளதுபோல் மூவண்ணப் பட்டைகள் இருந்தன. மாறாக, கோஹ்லியின் சட்டையில் மட்டும் மூன்று வெள்ளைப் பட்டைகள் இருந்தன.
இதுகுறித்து கோஹ்லியிடம் சுட்டிக்காட்ட, சற்றும் தாமதிக்காமல் உடை மாற்றும் அறைக்கு விரைந்து சென்று, சரியான சீருடையை அணிந்துகொண்டு அவர் களத்திற்குத் திரும்பினார்.
இதனிடையே, முதலிரு போட்டிகளில் விளையாடாத தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இஷான் கிஷனுக்குப் பதிலாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.