புதுடெல்லி: உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, அடுத்து தென்னாப்பிரிக்கா உடனான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.
அணி வீரர்கள் மீள்திறனுடன் மீண்டெழுமாறு அணித்தலைவர் ஜாஸ் பட்லர் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியுற்ற இங்கிலாந்து, லீக் சுற்று தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது நிலையில் உள்ளது. தொடக்க ஆட்டத்திலும் நியூசிலாந்திடம் அது தோல்வியடைந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் உடனான ஆட்ட முடிவு இங்கிலாந்துக்கு ஒரு ‘பெரிய பின்னடைவு’ என்று பட்லர் வர்ணித்தார்.
“போட்டி தொடங்குமுன், முதல் மூன்று ஆட்டங்கள் எப்படி முடியும் என்பது குறித்த வேறொரு யோசனையை நாங்கள் கொண்டிருந்தோம்.
“அணியில் நாம் மீள்திறனையும் முக்கியமாக, நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும்,” என்றார் அவர்.
2019 உலகக் கிண்ண ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்துக்கு நடப்பு போட்டி சாதகமாக அமையவில்லை.
வரும் சனிக்கிழமை தென்னாப்பிரிக்க அணியுடன் இங்கிலாந்து அணி பொருதவிருக்கிறது.
ஆப்கானுக்கு புது நம்பிக்கை
இதற்கிடையே, இங்கிலாந்தை வெற்றிகண்டதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு முன்னணி கிரிக்கெட் அணிகளை எதிர்கொள்வதற்கான நம்பிக்கை பிறக்கும் என்று அவ்வணி பயிற்றுவிப்பாளர் ஜானத்தன் டிரோட் கூறினார்.
2015ல் ஸ்காட்லாந்தை வென்ற பிறகு, எட்டு ஆண்டுகள் கழித்து உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாவது வெற்றியை ஆப்கானிஸ்தான் பதிவு செய்தது.
“ஆப்கானிஸ்தான் சாதிக்கக்கூடிய விஷயங்களுக்குத் தொடக்கமாக இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் டிரோட்.