அரபிக் கடலில் உருவான ‘பிபா்ஜாய்’ அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில் புயலுக்கான தயார்நிலை குறித்து விவாதிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர கூட்டம் நடத்தியுள்ளார்.
15ஆம் தேதி கட்ச் வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் மாநில பேரிடா் மீட்புப் படையினரும் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா்.
குஜராத் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு நான்கு மாவட்டங்களில் ஜூன் 13 முதல் ஜூன் 15ஆம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வருவதால் சவுராஷ்டிரா, கட்ச் மாவட்டங்களிலும் மும்பையிலும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது கனமழை பெய்யும் என்றும் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் அலையும் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
பிபர்ஜாய் புயலின் தாக்கத்தால் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பலத்த மழை பெய்கிறது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள னர். 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் புயல் தாக்கம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.