கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வன்முறையாளர்கள் தீவைத்துள்ளனர்.
இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சம்பவம் நடந்தபோது அமைச்சர் வீட்டில் இல்லை.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே மே மாத தொடக்கம் முதல் நீடித்து வரும் கலவரத்தில் இதுவரை 105க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இம்பாலில் நெம்சாவிற்கு சொந்தமான வீட்டிற்கு மர்மக் கும்பல் தீவைத்து எரித்தது.
தொடர்ந்து நியூ செக்கான் பகுதியில் உள்ள வீடுகளையும் மற்றொரு கும்பல் தீ வைத்து எரித்தது. அந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மாநில தலைநகர் இம்பாலில் உள்ள ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் திரண்டு, வீட்டின் அனைத்து பக்கங்களிலும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து வீட்டிற்குத் தீவைத்து எரித்தனர்.
மணிப்பூரில் பழங்குடியினர் பட்டியலில் மைத்தேயி இனக்குழு சேர விரும்பினர். இதற்கு மாநில பாஜக அரசு ஆதரவாக இருந்தது. அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவும் இதற்கு ஏதுவானதாக இருந்தது. ஆனால் ஏற்கெனவே பழங்குடிகள் பட்டியலில் இருக்கும் நாகா, குக்கிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுவே 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அம்மாநிலம் வன்முறைத் தீயில் வெந்து கொண்டிருக்கக் காரணம்.
மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தி அமைதி முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் பற்றி எரியும் பேராபத்து இருக்கிறது என்கின்றன அம்மாநிலங்களில் இருந்து வெளியாகும் ஊடகச் செய்திகள்.