தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அடுத்த மாதம் தமது ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியில் புதிய குழு ஒன்றை அமைக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.
அரசியல் நன்கொடைகளை அறிவிக்கத் தவறியதன் தொடர்பிலான விவகாரம் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தபின், நம்பிக்கையை மீண்டும் கொண்டுவரும் பொறுப்பு புதிய குழுவுக்கு உண்டு.
திரு கிஷிடா டிசம்பர் 25ஆம் தேதியன்று தமது திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அந்த விவகாரத்தின் தொடர்பில் கட்சியின் முன்னாள் தலைவர் கொயிச்சி ஹாகியூடா வழக்கறிஞர்களால் விசாரிக்கப்பட்டதாக அசாஹி செய்தித்தாள் தெரிவித்த சில மணி நேரத்திற்கு முன்னர், திரு கிஷிடாவின் கருத்து வந்தது.
ஜப்பானில் 2025ஆம் ஆண்டுவரை பொதுத் தேர்தல் நடைபெறவேண்டியதில்லை. இருப்பினும், பொதுமக்களின் ஆதரவை மீண்டும் பெறுவதில் தோல்வியுற்றால், ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி திரு கிஷிடாவின் தவணைக்காலம் செப்டம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னரே அவருக்குப் பதிலாக வேறொருவரைத் தேடக்கூடிய நிலை ஏற்படலாம்.
தோக்கியோ வழக்கறிஞர்கள் செய்தி அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். திரு ஹாகியூடாவின் அலுவலகத்தில் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
மிதவாத ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிப் பதவியிலிருந்து சென்ற வாரம் விலகிய திரு ஹாகியூடா, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உயர்நிலை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆக அண்மையில் விசாரிக்கப்பட்டவர். நிதித்திரட்டு நிகழ்ச்சிகளில் கிடைத்த பணத்தை மறைத்துவைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.