இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரிவினைவாதப் போராளிகளைக் குறிவைத்து ஜனவரி 18ஆம் தேதி ஈரானில் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
பாகிஸ்தானில் இஸ்ரேலுடன் தொடர்புடைய போராளித் தளங்களை தாக்கியதாக தெஹ்ரான் கூறிய இரண்டு நாள்களுக்குப் பிறகு அண்மைய தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று சில ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகம் தெரிவித்தது. அதில் மூன்று பெண்களும் நான்கு குழந்தைகளும் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
“வேவு அடிப்படையிலான நடவடிக்கையில் சில பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அவை போராளி மறைவிடங்களுக்கு எதிராக, அதிக ஒருங்கிணைப்புடனும் குறிப்பிட்ட இலக்குடன் துல்லியமாகவும் மேற்கொள்ளப்பட்ட ராணுவத் தாக்குதல்கள் என்று அமைச்சு கூறியது.
பாகிஸ்தான் ஈரானின் அரசுரிமையையும் பிரதேச நிலையையும் முழுமையாக மதிப்பதாக அது தெரிவித்தது.
“இன்றைய செயலின் ஒரே நோக்கம், பாகிஸ்தானின் சொந்த பாதுகாப்புக்காகவும், தேசிய நலனுக்காகவும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது,” என்று அது கூறியது.
இந்நிலையில் தாக்குதல்கள் ராணுவ விமானங்களைக் கொண்டு நடத்தப்பட்டதாக பாகிஸ்தானிய வேவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.