மேரிலேண்ட்: இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு, பின்னர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட 58 வயது ஆடவர், ஆறு வாரங்களுக்குப்பின் உயிரிழந்தார்.
இத்தகவலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
ஃபிரடெரிக் நகரைச் சேர்ந்த லாரன்ஸ் ஃபாசட் என்ற அந்த ஆடவர், அம்மருத்துவ நிலையத்தில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட இரண்டாவது மனிதர்.
அங்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதலாவது மனிதரான 57 வயது டேவிட் பென்னட், அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு காலமானார்.
பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட பிறகு அவருக்குப் பல்வேறு மருத்துவச் சிக்கல்கள் ஏற்பட்டன. பன்றியைத் தொற்றும் நுண்கிருமியின் சுவடுகள் அவரது புதிய இதயத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பென்னட்டுக்குப் புதிய இதயம் பொருத்தப்பட்ட பிறகு அதனை அவரது உடல் ஏற்றுக்கொள்ளாததற்கான தீவிர அறிகுறிகள் தென்படவில்லை என்றும் அதே நேரத்தில், ஃபாசட்டிடம் தொடக்கத்திலேயே அதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டன என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.