நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த டிரெவர் ஜேக்கப் என்னும் ஆடவர் தனது யூடியூப் காணொளிகளை அதிக அளவில் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே விமான விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் விசாரணையின் போது அவர் பொய்யான தகவல்களையும் தந்து அதிகாரிகளை அலைக்கழிப்பு செய்துள்ளார். ஜேக்கப் செய்த குற்றத்திற்காக அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “எனது விமானத்தை விபத்துக்குள்ளாக்கினேன்” என்ற தலைப்பில் அந்தக் காணொளியை ஜேக்கப் பதிவேற்றம் செய்தார்.
கலிஃபோர்னியாவின் தென்பகுதியில் உள்ள காடுகளில் அந்த விபத்தை நிகழ்த்தினார் ஜேக்கப். அந்தக் காணொளி பல மில்லியன் முறை சமூக ஊடகங்களில் பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் அமெரிக்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
இதுபோன்ற செயல்கள் பொதுமக்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கும் மேலும் இது தேவையில்லாத பிரச்சினைகளையும் உண்டாக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான விபத்து காணொளி யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.