ஜெருசலம்: எகிப்து உடனான காஸா எல்லையை இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சூளுரைத்துள்ளார்.
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போர் அதன் உச்சத்தில் உள்ளது,” எனக் குறிப்பிட்டார்.
எகிப்து-காஸா எல்லையில் உள்ள ‘ஃபிலடெல்ஃபி கோரிடோர்’ பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றார் அவர்.
“அது மூடப்பட வேண்டும். நாங்கள் நாடும் ராணுவமற்ற நிலையை வேறெந்த ஏற்பாட்டாலும் உறுதிசெய்ய முடியாது என்பது தெளிவாக உள்ளது,” என்று திரு நெட்டன்யாகு சொன்னார்.
அந்த நடவடிக்கை குறித்து அவர் விவரிக்கவில்லை என்றாலும், 2005ல் காஸாவிலிருந்து ராணுவத்தை மீட்டுக்கொண்ட நிலையிலிருந்து பின்வாங்குவதைக் காட்டுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மாதக்கணக்கில் நீடிக்கும் என்று கூறப்படும் நிலையில் திரு நெட்டன்யாகுவின் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை சண்டை அல் புரெய்ஜ், மகாஸி, கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் மையம் கொண்டிருந்ததாக குடியிருப்பாளர்களும் மருத்துவ உதவியாளர்களும் தெரிவித்தனர்.
காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதலில், ஹமாஸ் படையின் ஆயுதமேந்திய பிரிவின் மூத்த உறுப்பினரான அப்துல் ஃபத்தாஹ் மாலி கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஊடகம் சனிக்கிழமை தெரிவித்தது. அவர் எப்போது கொல்லப்பட்டார் என்பது பற்றித் தகவல்கள் குறிப்பிடவில்லை.
ஆரம்பத்தில் மேற்குக் கரையைச் சேர்ந்தவரான மாலி, 2011ல் சிறைக்கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்பட்டு காஸாவுக்கு வெளியேற்றப்பட்டார்.
காஸா சண்டையில் தன்னுடைய ராணுவ வீரர்களில் 172 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
காஸா போர் காரணமாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையிலும் வன்முறை வெடித்துள்ளது.