பால்டிமோர்: அண்மையில் அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் துறைமுகத்தில் பாலம் ஒன்றின்மீது சிங்கப்பூரில் பதிவான சரக்குக் கப்பல் மோதியது.
சம்பவம் நிகழ்ந்தபோது ‘டாலி’ என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பல் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. அது இலங்கையை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாலம் மீது கப்பல் மோதுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கப்பலில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அதன் மாலுமி புகார் அளித்திருந்ததாக அறியப்படுகிறது.
கப்பலை பட்டறைக்குக் கொண்டு செல்ல இழுவைப்படகு தேவைப்படுவதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.
இந்த விவரங்கள் கப்பலின் பதிவுப் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக மார்ச் 27ஆம் தேதியன்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடிந்து விழுந்த ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் 1976ஆம் ஆண்டில் கட்டப்பட்டது என்றும் புதிய பாலங்கள் கொண்டுள்ள அம்சங்கள் அதனிடம் இல்லை என்றும் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் தலைவர் கூறினார்.
இதனால் அந்தப் பாலம் இடிந்து விழும் அபாயம் அதிகம் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
பாலம் இடிந்து விழுந்ததில் ஆறு ஊழியர்கள் ஆற்றில் மூழ்கினர். அதையடுத்து, அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இந்நிலையில், மார்ச் 27ல் ஆற்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேரிலேண்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய நால்வரைத் தேடும் பணி தொடர்கிறது.
ஆனால் அவர்கள் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆற்றில் விழுந்த இரண்டு ஊழியர்களை மார்ச் 26ஆம் தேதியன்று மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றினர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.